பயணக் கட்டுப்பாடு காரணமாக மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் உணவின்றி பாதிக்கப்பட்டுள்ள ஆதிவாசி குடும்பங்களை சேர்ந்த 150 குடும்பங்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகர் சுகத் மாசிங்க தலைமையிலான காவற்துறை குழுவினர் நேற்று செவ்வாய்க்கிழமை (08) ஒரு தொகை நிவாரணப் பொதிகளை வழங்கி வைத்தனர். வாகரை பிரதேசத்தின் ஆதிவாசி மக்களின் தலைவர் அம்பலவர்கே நல்லதம்பி வேலாயுதம் பயணத்தடை காரணமாக தமது மக்கள் உணவின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான ஆதிவாசிகளின் தலைவர் ஊர்வக்கே வன்னிலத்தோவிடம் வேண்டுகோள் விடுத்தார்
இதனையடுத்து அவர் மட்டக்களப்பு சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகர் சுகத் மாசிங்கவிடம் இவ் விடயம் தொடர்பான கோரிக்கையினை முன்வைத்ததையடுத்து குறித்த பிரதேசத்திற்கு ஒரு தொகை நிவரணப் பொதிகளுடன் சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகர் வாழைச்சேனை உதவி காவற்துறை அத்தியட்சகர் பி.எம்.ஜெயசுந்தர, மட்டக்களப்பு காவற்துறையின் தலைமையக காவற்துறை பொறுப்பதிகாரி பி.கே.ஹொட்டியாராச்சி, ஏறாவூர் காவல் நிலை பொறுப்பதிகாரி ஜெயந்த, வாழைச்சேனை காவல் நிலை பொறுப்பதிகாரி தனஞ்சயபெரமுன , மற்றும் வாகரை காவற்துறைப் பொறுப்பதிகாரி ஜ.பி.விஜேயவர்த்தன ஆகியேர் கொண்ட காவற்துறையினருடன் சென்று பணிச்சங்கேணி, மாங்கேணி, கிருமிச்சை, குஞ்சன் கல் குளம், கொக்குவில் போன்ற கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு இவ் நிவாரணப் பொதிகள் வழங்கி வைத்தனர்.
இதன் பின்னர் ஆதிவாசி மக்களின் குறைகளை கேட்டறிந்து கொண்ட காவற்துறை அத்தியட்சகர் தமது வழிகாட்டலில் இவ் நடவடிக்கையை முன்னெடுத்ததாகவும் தெரிவித்தார். இதனையடுத்து ஆதிவாசிகள் தலைவர் நல்லதம்பி வேலாயுதம் உணவு பொருட்கள் வழங்கி வைத்த காவற்துறையின் அத்தியட்சகர் தலைமையிலான காவற்துறை குழுவினருக்கு நன்றியை தெரிவித்ததுடன் மேலும் இது போன்ற தமது மக்கள் ஏனைய கிராமங்களில் வாழ்ந்து வருவதாகவும் அவர்களுக்கும் நிவாரணப் பொதி வழங்க ஏற்பாடு செய்து தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.