குருநாகலில் இருந்து அம்பாறைக்கு அத்தியாவசிய சேவை என்ற பேரில் அரசு மானியமாக வழங்கிய உரத்தை சட்டவிரோதமாக லொறி ஒன்றில் கடத்திச் சென்ற இருவரை மட்டக்களப்பு தாழங்குடா பகுதியில் வைத்து இன்று புதன்கிழமை (9) அதிகாலையில் கைது செய்துள்ளதாகவும் 53 உரப்பைகளை மீட்டுள்ளதாக காத்தான்குடி காவற்துறையினர் தெரிவித்தனர்.
இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய சம்பவதினமான இன்று அதிகாலை தாழங்குடா பகுதியில் இராணுவத்தினர் வீதிச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டபோது அம்பாறை கல்முனை பகுதியை நோக்கி பிரயாணித்த லொறியை நிறுத்தி சோதனையிட்டனர்.
இதன் போது அத்தியவசிய சேவை என்ற பேர்வையில் அரசு மானியமாக வழங்கிய உரத்தை சட்டவிரோதமாக கடத்தி செல்வதாகவும் கண்டறிந்ததையடுத்து அந்த லொறி சாரதி மற்றும் நடத்துனர் உட்பட இருவரை இராணுவத்தினர் கைது செய்ததுடன் அதில் இருந்து 53 உரப்பைகளை மீட்டனர்.
இதில் கைது செய்தவர்களையும் மீட்கப்பட்ட உரபைகள் மற்றும் லொறி என்பவற்றை இராணுவத்தினர் காத்தான்குடி காவற்துறையினறிடம் ஓப்படைத்துள்ளதாகவும் இவர்களை இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.