நாளையும் சில இடங்களில் மழை பெய்யக் கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்

201909220304514180 In Tamil Nadu today with rain showers likely SECVPF
201909220304514180 In Tamil Nadu today with rain showers likely SECVPF

நாட்டில் கடந்த ஒரு வாரமாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை ஒரு வாரத்தில் மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவின் காரணமாக கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு, புத்தளம், களுத்துறை, நுவரெலியா, கேகாலை, கண்டி, குருணாகல் மற்றும் காலி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 44,946 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 76 419 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் 20 வீடுகள் முழுமையாகவும் , 1,083 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்துள்ள 747 குடும்பங்களைச் சேர்ந்த 2905 நபர்கள் 60 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 1,442 குடும்பங்களைச் சேர்ந்த 5084 நபர்கள் உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நாளைய தினமும் மழையுடனான காலநிலை தொடரும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதற்கமைய மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலும் இடைக்கிடை மழை பெய்யக் கூடும்.

சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவு பிரதேசங்களிலும் , வடக்கு, வட-மத்திய மாகாணங்களிலும் மற்றும் அம்பாந்தோட்டை, திருகோணமலை மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும்.

இடியுடன் கூடி மழை பெய்யும் போது காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.