மக்களிற்கு காணியை பகிர்ந்தளிக்கும் கடிதத்தினை பிரதேச செயலகத்திற்கு ஆனந்தசங்கரி அனுப்பி வைத்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் உள்ள சுதந்திரபுரம் பகுதியில் 20 ஏக்கர் காணியில் மக்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வந்த நிலையில், காணிஉரிமம் இல்லாமையினால் பல்வேறு நெருக்கடிகளை மக்கள் எதிர்கொண்டு வந்தனர்.
தெங்கு அபிவிருத்திக்காக வழங்கப்பட்ட குறித்த காணியை தமக்கு தருமாறு மக்கள் தம்மை சந்தித்து கோரியிருந்த நிலையில் மக்களிற்கு அதனை பகிர்ந்தளிக்க முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.ஆனந்தசங்கரி பிரதேச செயலாளரிற்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.
இவ்விடயம் தொடர்பில் இன்று சில ஊடகங்கள் அவரிடம் வினவியபோது:
தனக்கு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என சொத்து சேர்த்துக்கொள்வதற்கு ஆசை கிடையாது. இன்றுவரை கிளிநொச்சியில் எனக்கென அரசால் வழங்கப்பட்டதாக கூறக்கூடிய சொத்து எதுவும் இல்லை. சொத்து சேர்த்துக்கொள்வதற்கு எந்தனையோ சந்தர்ப்பங்கள் எனக்கு இருந்தபோதிலும் நான் செய்யவில்லை.
குறித்த காணியை பெற்றுக்கொள்வதற்கு ஆரம்பத்தில் அரசாங்க அதிபரை நாடியிருந்தேன். எனினும் அங்கு மக்கள் குடியிருப்பதை அறிந்து பின்னர் எவ்வித நடவடிக்கையும் நான் மேற்கொண்டிருக்கவில்லை. இந்த நிலையில் மக்கள் அண்மையில் என்னை சந்தித்தனர். தற்போது உள்ள நிலை தொடர்பில் பிரதேச செயலாளரும் தெளிவுபடுத்தியிருந்தார். அவரது முயற்சியாலும், மக்களின் தேவை கருதியும் குறித்த காணியை மக்களிற்கு பகிர்ந்தளிப்பதற்கு நான் பிரதேச செயலகத்திற்கு உத்தியோகபூர்வமாக கடிதம் மூலம் வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.