யாழில் அமைக்கப்பட்ட மாதிரிக் கிராம வீட்டுத் திட்டம் பொது மக்களிடம் கையளிப்பு: சஜித்

IMG 2143
IMG 2143

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசாவினால் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் யாருவருக்கும் வீடு செமட்ட செவன திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட மாதிரிக் கிராம வீட்டுத் திட்டம் இன்று பொது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இன்று திங்கட்கிழமை யாழிற்கு விஐயம் மேற்கொண்ட வீடமைப்புத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசா யாழ்ப்பாணத்தின் வலிகாமம் கிழக்கு ஊரெழுப் பகுதியில் பொக்கணை எனும் பெயரில் புதிதாக அமைக்கப்பட்ட மாதிரிக் கிராமத்தை திறந்து வைத்து வீடுகளையும் உரிமையாளர்களிடம் கையளித்தார்.

அமைச்சர் சஜித் பிரேமதாசாவினால் யாவருக்கும் வீடு என்ற செமட்ட செவன திட்டம் நடாளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இத் திட்டத்தில் 274 ஆவது திட்டமாக யாழ். ஊரெழுப் பகுதியில் மாதிரிக் கிராம விடுகள் அமைக்கப்பட்டன. இவ்வாறு அமைக்கப்பட்ட 19 வீடுகளையும் கையளிக்கும் நிகழ்வை ஆரம்பித்து வைத்த அமைச்சர் சஜித் பிரேமதாசா வீட்டு உரிமையாளர்களுக்கு வீட்டுப் பத்திரங்களையும் வழங்கி வைத்தார்.

மேலும் இதன் போது அங்கிருந்தவர்களுக்கு வீட்டு உபகரங்கள் மற்றும் மூக்குக் கண்ணாடிகள் என்பனவும் அமைச்சரால் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராசா, ஈஸ்வரபாதம் சரவணபவன், தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்ட அரச அதிகாரிகள், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.