வட்டுவாகல் போராட்டக்காரர்களை தள்ளிவிழுத்திய காவல்துறை, புகைப்படம் எடுத்து அச்சுறுத்திய கடற்படை!

DSC07336
DSC07336

முல்லைத்தீவு மாவட்டத்தில் வட்டுவாகல் பகுதியில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியினை அரசாங்கம் கோத்தபாய கடற்படை முகாமுக்கு சுவீகரிக்கும் நடவடிக்கைக்காக இன்று 29.07.21அளவீடு செய்யப்படவுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.

குழப்பம் உச்சமடைந்த நிலையில் சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் வருகைதந்து மக்களின் கோரிக்கைகளை அரசாங்க அதிபருக்கு தெரியப்படுத்திய  நிலையில் அரசாங்க அதிபர் ஊடாக நிலஅளவை திணைக்களத்திற்கு விடயம் எடுத்துக் கூறப்பட்டு அளவீட்டுப்பணிகள் நடைபெறாது  என போராட்டக்காரர்களிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

கடற்படை முகாமிற்குள் சென்ற நில அளவைத்திணைக்கள அதிகாரிகளே இதனை சொல்ல வேண்டும் அவர்கள் உடனடியாக வெளியே வரவேண்டும் என கோரியபோது  நிலஅளவைத்திணைக்கள அதிகாரிகள் போராட்டகாரர்களிடம் வந்தவேளை குறித்த அதிகாரி வாகனத்தில் இருந்து இறங்கி மக்களை சந்திக்க வந்தவேளை உதவி காவல்துறை அத்தியட்சகர் அவர்கள் அவர்களை திருப்பி வேறு வழி ஊடாக அனுப்ப முற்பட்ட வேளை போராட்டகாரர்கள் வானத்தினை மறிக்க முற்பட்ட போது காவல்துறையினர் போராட்டகாரர்களை தள்ளிவிட்டு வாகனத்தினை எடுத்து செல்ல அனுமதித்துள்ளார்கள். இதன்போது முல்லைத்தீவு மாவட்ட உதவி காவல்துறை அத்தியட்சகரின் கைபேசி கீழே விழுந்துள்ளதுடன் காவல்துறையினர் போராட்டகாரர்களை இழுத்து வைத்து தள்ளி வாகனத்தினை புதுக்குடியிருப்பு நோக்கி பயணிக்க சொல்லியுள்ளார்கள். இதனால் அங்கு மேலும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட உதவி காவல்துறை அத்தியட்சகர் கடற்படை முகாமுக்குள் சென்றுள்ளார்.

இதேவேளை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை புலனாய்வாளர்கள் காவல்துறையினர் கடற்படையினர் என பல்வேறு தரப்பினரும் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் முகமாக செயற்பட்டுள்ளனர்.