மங்களவின் வெற்றிடத்தை மீள்நிரப்ப முடியாது! – சம்பந்தன்

download 1 34
download 1 34

மீள் நிரப்ப முடியாத வெற்றிடத்தை மங்கள சமரவீரவின் மரணம் ஏற்படுத்தியுள்ளது எனத் தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் மரணம் தொடர்பாக அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான மங்கள சமரவீரவின் இழப்பானது கவலைக்குரியது. உண்மையான ஓர் இலங்கையராக அவர் சமத்துவம், நீதி மற்றும் சுயமரியாதை என்பவற்றின் அடிப்படையில் அனைத்து இலங்கையர்களையும் இணைத்து நாட்டை எதிர்கால சந்ததியினருக்காக வளர்ச்சியிலும் செழிப்பிலும் முன்கொண்டு செல்ல வேண்டும் என விரும்பிய ஒருவராவார்.

தனது வாழ்விலும் அரசியல் வாழ்க்கையிலும் இந்தக் கொள்கைகளில் அவர் உறுதியாக இருந்ததுமல்லாமல் எந்தச் சந்தர்ப்பத்திலும் இந்தக் கொள்கைகளில் இருந்து அவர் பின்வாங்கவில்லை.

மங்களவின் மரணமானது, இன, மத வேறுபாடின்றி அனைத்து இலங்கை மக்களும் உண்மையான கொள்கைகள் உள்ள ஒரு தலைவரை இழந்த நிலைக்கு ஆளாக்கியுள்ளது.

அன்னாரோடுடனான எனது உறவு மிகவும் நெருக்கமான ஒன்றாகும். இந்த இழப்பால் நான் மிகவும் வேதனையடைகின்றேன். மீள் நிரப்பமுடியாத வெற்றிடத்தை இவரது மரணம் ஏற்படுத்தியுள்ளது. கொள்கைகளுக்காக முன்னின்ற ஒரு உற்ற நண்பனை இழந்துள்ளேன்.

இந்தக் கவலைமிக்க நேரத்தில் அன்னாரது குடும்பம் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்” என்றுள்ளது.