ஜனாதிபதியானால் காணாமல் ஆக்கப்பட்டவா்கள் விடயத்தில் தீா்க்கமான நடவடிக்கை: சஜித்!

DSC0185 01
DSC0185 01

நான் ஜனாதிபதியாக தோ்வு செய்யப்பட்டால் காணாமல் ஆக்கப்பட்டவா்கள் விடயத்தில் தீா்க்கமான நடவடிக்கைகளை நிச்சயமாக எடுப்பேன். காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் செயற்பாடுகளை தாண்டியும் எனது நடவடிக்கை அமையும் என அமைச்சா் சஜித் பிறேமதாஸ கூறியுள்ளாா்.

யாழ்.மாவட்டத்திற்கு இன்று காலை வருகைதந்த அமைச்சரை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஒருவரின் உறவினா் சஜித் பிறேமதாஸவை சந்தித்துப் பேச முயற்சித்தாா். ஆனாலும் பாதுகாப்பு பிரிவினர் அவரை தடுத்தனர்.

இதன் போது அங்கு நின்ற யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட்டிடம் உரையாடிய குறித்த தாய் தான் யார் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு சஜித் பிரேமதாசவிடம் ஒரு நிமிடம் பேசுவதற்கு வாய்ப்பு பெற்றுத்தருமாறு கோரியிருந்தார்.

முதல்வர் இமானுவேல் ஆனோல்ட்டின் ஏற்பாட்டில் சஜித் பிரேமதாசவை சந்தித்த தாய், அவரைப் பார்த்து நீங்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிகின்றோம். நாங்கள் உங்களுக்கு வாக்களிக்க வேண்டுமாக இருந்தால் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களிலும் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு ஒரு தீர்க்கமான முடிவினை தரவேண்டும்.

இதனை யாழ்.மாநகர முதல்வர் சஜித் பிரேமதாசவிற்கு மொழிபெயர்ப்பு செய்திருந்தார். இதற்கு பதிலளித்த சஜித் பிரேமதாச காணாமல் போனோர் விடயத்தில் நான் கரிசனையுடன் செயற்படுவேன். காணாமல் போனார் பற்றிய அலுவலகம் அதன் செய்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இதன் ஊடாக நடவடிக்கை எடுப்பேன் என அவர் தெரிவித்தார்.