சர்வதேச ஜனநாயக நாள்: ஜனநாயகம், இலங்கையில் ஒரு கேலிக்கூத்தாகவே உள்ளது-சிவசக்தி ஆனந்தன்

IMG 20210915 114708
IMG 20210915 114708

ஜனநாயகம் என்பது இலங்கையை பொறுத்தமட்டிலே ஒரு கேலிக்கூத்தாகவும், அது ஒரு சர்வாதிகாரத்தை நோக்கியும் ஜனநாயகத்தின் பெயரால் நம்பி ஆதரவு வழங்குகின்ற மக்கள் ஏமாற்றப்படுகின்ற ஒரு துரதிஷ்டவசம்தான் இலங்கையை பொறுத்தமட்டிலே இருக்கிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 15 ம் திகதியை ஐ.நா சர்வதேச ஜனநாயக நாளாக அறிவித்துள்ளது. இந்நிலையில், ஜனநாயகம் தொடர்பாக கருத்து தெரிவித்த முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், “ஜனநாயகத்துக்கு பல விதமான விளக்கங்களும், வியாக்கினங்களும், பல தலைவர்களால் சொல்லப்பட்டாலும் கூட, இலங்கையை பொறுத்தமட்டில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு என்று பெயரளவில் மட்டுமே இங்கு ஜனநாயகம் இருக்கிறது.

நீண்ட காலமாக தமிழ் மக்களினுடைய உரிமை தொடர்பாக அல்லது சிறுபான்மை மக்களினுடைய ஜனநாயகத்தை மதித்து நடக்கின்ற நிலைமைகள், ஜனநாயகம் என்ற பெயரால் சர்வாதிகாரமும் ஜனநாயகத்துக்கு விரோதமான செயல்பாடுகளும் தான் இலங்கையை பொறுத்தமட்டில் நீண்ட காலமாக இருக்கிறது.

ஆகவே பெரும்பான்மை மக்களினுடைய முடிவுகள் ஜனநாயக ரீதியாக ஏற்றுக் கொண்டாலும் கூட, அது முழுக்க முழுக்க ஜனநாயகத்தினுடைய பெயரால் அது ஒரு சர்வாதிகாரத்தை நோக்கித்தான் இருக்கிறது.
இதே மாதிரி தமிழர்கள் மத்தியில் தமிழர்களினுடைய உரிமைக்காக புறப்பட்டு இருக்கக்கூடிய தமிழ் கட்சிகளுக்கு இடையிலும் கூட ஜனநாயகத்தின் பெயரால் கட்சிகளுக்குள்ளும் ஜனநாயகம் இல்லை.
மக்கள் வழங்குகின்ற ஜனநாயக உரிமைகளுக்கும், அதை மதித்து கொடுக்கப்படுகின்ற வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படுவதில்லை. ஆகவே ஜனநாயகத்தின் பெயரால் தமிழ் அரசியலுக்குள்ளேயும் சரி அல்லது இலங்கையில் இருக்கக்கூடிய, சிங்களப் பேரினவாத அரசியலுக்குள்ளேயும் சரி முழுவதும் ஜனநாயகத்தின் பெயரால் மக்கள் ஏமாற்றப்படுகிறது.

மக்களுக்கு மேல் சர்வாதிகாரம் செலுத்தப்படுகின்ற ஒரு நிலைமைதான் இருக்கிறது. ஆகவே ஜனநாயகம் என்பது இலங்கையை பொறுத்தமட்டிலே ஒரு கேலிக்கூத்தாகவும், அது ஒரு சர்வாதிகாரத்தை நோக்கியும் ஜனநாயகத்தின் பெயரால் நம்பி ஆதரவு வழங்குகின்ற மக்கள் ஏமாற்றப்படுகின்ற ஒரு துரதிஷ்டவசம்தான் இலங்கையை பொறுத்தமட்டிலே இருக்கிறது என்றார்.