அடம்பனில் பதுக்கி வைத்திருந்த மஞ்சள் மூட்டைகளுடன் ஒருவர் கைது!

aaaaa
aaaaa

மன்னார்-மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அடம்பன் காவல்துறை பிரிவில் உள்ள வீடு ஒன்றில், சட்ட விரோதமான முறையில் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒருதொகை உலர்ந்த மஞ்சள் கட்டி மூடைகளை அடம்பன் காவல்துறையினர் இன்று புதன்கிழமை (15) அதிகாலை மீட்டுள்ளனர்.

அடம்பன் காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், விரைந்து செயல்பட்ட அடம்பன் காவல்துறையினர் இன்று புதன்கிழமை அதிகாலை குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றை சோதனையிட்டனர். இதன் போது குறித்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த 29 மூளைகளைக் கொண்ட 1164 கிலோ உலர்ந்த மஞ்சள் கட்டி மூடைகளை மீட்டுள்ளனர்.

மேலும் குறித்த வீட்டின் உரிமையாளரையும் அடம்பன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட மஞ்சள் கட்டி மூடைகள் அடம்பன் காவல்துறையினர் நிலையத்தில் ஒப்படைக்கப் பட்டுள்ளதோடு,கைது செய்யப்பட்ட நபரை அடம்பன் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். விசாரணைகளின் பின் மன்னார் நீதிமன்றத்தில் குறித்த நபர் ஆஜர்படுத்தப்பட உள்ளதோடு, மீட்கப்பட்ட மஞ்சள் கட்டி மூட்டைகளும் மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப் படவுள்ளதாக அடம்பன் காவல்துறையினர் தெரிவித்தனர்.