மைத்திரியுடன் மீண்டும் மேடையேறத் தயாரில்லை – பொன்சேகா

sarath fonseka 4697
sarath fonseka 4697

“ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட நாம் தயாரில்லை.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“ஐக்கிய மக்கள் சக்திக்குள் கடும் மோதல் எதுவும் இல்லை என்ற போதிலும் அத்தகையதோர் நிலைமையைத்  தோற்றுவிப்பதற்குச் சிலர் முற்படுகின்றனர்.

இன்று அரசுக்குள்தான் உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டுள்ளது. பங்காளிக் கட்சிகள் வெவ்வேறான வழிகளில் பயணிக்கின்றன. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் எம்முடன் இணையலாம். அவர்களுடன் பயணிப்போம்.

ஆனால், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் எவ்வித கொடுக்கல் – வாங்கல்களும் கிடையாது. அவருடன் மீண்டும் மேடையேறுவதற்கு நான் தயாரில்லை” என்றார்.