ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வத்தளை தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ, ’60 வயதில் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவேன்’ என்று உத்தரவாதமளிக்கும் சான்றுப்பத்திரத்தை கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் கையளித்துள்ளார்.
அதுமாத்திரமன்றி எதிர்வருங்காலத்தில் கம்பஹா மாவட்டத்தின் வத்தளை ஆசனத்தின் ஊடாக பசில் ராஜபக்ஷவிற்கு சவாலாகத் தேர்தலில் களமிறங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோவின் வத்தளை தொகுதி அலுவலகத்தைத் திறந்துவைக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கழமை கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் நடைபெற்றது.
தொகுதி அலுவலகம் திறந்துவைக்கப்பட்டதன் பின்னர், தான் 60 வயதில் அரசியலிலிருந்து ஓய்வுபெறுவது குறித்த உத்தரவாதத்தை அளிக்கும் சான்றுப்பத்திரத்தை ஹரீன் பெர்னாண்டோ எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் கையளித்தார்.