நாடளாவிய ரீதியில் சுகாதார தொழில் வல்லுநர்கள் சம்மேளனம் மேற்கொண்டுவரும் உரிமை சார்ந்த போராட்டத்திற்கு ஆதரவினை வழங்கும் வகையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சுகாதார தொழில் வல்லுநர்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் போதனா வைத்தியசாலை 16 தொழில் சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று வியாழக்கிழமை (25) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுகாதார தொழில் வல்லுநர்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டினையடுத்து நேற்றும் இன்றும் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர் உத்தியோகத்தர்கள் மற்றும் நிறைவுகான் மருத்துவ உத்தியோகத்தர்கள் துறைசார் நிபுணர்கள் ஒன்றிணைந்து சுகயீன விடுமுறை போரட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் முன்னால் இன்று வியாழக்கிழமை பகல் ஒன்றிணைந்த தாதி உத்தியோகத்தர்கள் தமது பதவி உயர்வு தொடர்பாக அமைச்சரவையில் அனுமதி வழங்கியபோதும் இதுவரை சுகாதார அமைச்சு அதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை எனவும், றெனுக்கே சம்பள அறிக்கையை நடைமுறைப்படுத்துமாறும், பறிக்கப்பட்ட பதவிநிலை உத்தியோகத்தர் தகுதியை மீண்டும் வழங்கு மேலதிக நேரத்திற்கான நியாயமான அலகு கொடுப்பனவை வழங்கு போன்ற கோரிக்கையை முன்வைத்து சுலோகங்கள் ஏந்தியவாறு கேஷங்கள் எழுப்பியவாறு சுமார் அரை மணித்தியாலம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டகாரர்கள் அங்கிருந்து விலகி சென்றனர்.