எரிபொருள் விலை பிரச்சினைக்கு தீர்வாக விலை சூத்திரம் – உதய கம்மன்பில

uthayan
uthayan

எரிபொருள் விலை பிரச்சினைக்கு தீர்வாக விலை சூத்திரத்தை அமுல்படுத்துவதே தற்போதைய சந்தர்ப்பத்தில் நாட்டுக்கு அனுகூலமானதென வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உலக சந்தையில் ஒருபோதும் இல்லாதவாறு எரிபொருள் விலை அதிகரித்துள்ளது.

ஜனவரி மாதத்தின் போது பெற்றோல் பீப்பாய் ஒன்றின் விலையானது 56 முதல் 58 அமெரிக்க டொலராக காணப்பட்ட போதிலும், தற்போது 96 முதல் 98 அமெரிக்க டொலராக காணப்படுகிறது.

2 வாரத்திற்கு ஒரு முறை லீற்றருக்கு ஏற்படும் நட்டம் தொடர்பில் அமைச்சுக்கு அறியப்படுத்துவோம்.

அதற்காக விலையினை அதிகரிப்பது மற்றும் வரியினை குறைப்பது தொடர்பில் அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும்.

இந்நிலையில் எரிபொருள் விலை சூத்திரத்தை நடைமுறைப்படுத்துவதே தற்போதைக்கு உசிதமானதாக படுகிறது.

மறைந்த அமைச்சர் மங்கள சமரவீரவே இந்த விலைசூத்திரத்தை முன்வைத்தார்.

அவர் இதனை முன்வைக்கும்போது எதிர்ப்பை வெளியிட்ட நாங்களே மீண்டும் அதனை நடைமுறைப்படுத்துவதா? என்ற கேள்வி எழும்.

ஆனால் எதுவுமே இல்லாதிருப்பதைக் காட்டிலும் இவ்வாறான ஒன்றாவது இருப்பது சிறப்பானது என்று அமைச்சர் உதய கம்மன்பில கூறினார்.

அதேநேரம், எதிர்வரும் பெப்ரவரி மாதம் வரையில் நாட்டிற்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது.

எனவே பொதுமக்கள் அது குறித்த அச்சம் கொள்ள தேவையில்லை என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.