ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை 70 ஆண்டுகளா அல்லது 99 ஆண்டுகளா என்பதில் குழப்பம் – ரணில்

Ranil 1
Ranil 1

சீனாவுடன் செய்துகொள்ளப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை 70 ஆண்டுகளுக்கே செய்துகொள்ளப்பட்டதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறிய வேளையில் அதனை மறுத்த அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன இது 99 ஆண்டுகால ஒப்பந்தம் என்றார். 

இதனால் குறித்த ஒப்பந்தம் 70 ஆண்டுகளா? அல்லது 99 ஆண்டுகளா? என்பது குறித்து முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவிற்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. 

இந்நிலையில் சீனாவுடன் செய்துகொள்ளப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கையை மாற்றமின்றி முன்னெடுத்து செல்ல ஜனதிபதி மற்றும் பிரதமர் இணங்கியதாக ரணில் விக்கிரமசிங்க சபையில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (02) இடம்பெற்ற துறைமுகங்கள் அமைச்சு மற்றும் நீர் வழங்கல் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில்  உரையாற்றிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக, ஹம்பாந்தோட்டை துறைமுக குத்தகை விவகாரம் குறித்து சில காரணிகளை முன்வைத்தார். இதன்போது அவர் கூறுகையில்,

ஒரு வளத்தை குத்தகைக்கு வழங்கும் போதும் 33 ஆண்டுகளுக்கு மேல் ஒரு தரப்புக்கு குத்தகைக்கு கொடுக்கும் போதும் அது உருத்துரிமை என்றே கருதப்படும். அதனை மீள பெற்றுக்கொள்ள முடியாது. 

அவ்வாறு ஒரு வளத்தை கொடுத்து மீண்டும் பெற்றுக்கொண்ட ஒரு நிறுவனத்தின் பெயரைக் கூற முடியுமா? 

ப்ரீமா நிறுவனத்தை பிரித்தானியா நிறுவனமொன்றுக்கு 20 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை அதனை எம்மால் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்றது அல்லது குத்தகைக்கு கொடுக்க காரணம் என்னவென்றால், நாம் பெற்றுக்கொண்ட கடன்களை செலுத்த முடியாதமையே இதற்கு காரணமாகும். 

ஆனால் பெற்றுக்கொண்ட பணத்தில் கடன்களை செலுத்தவில்லை. பெற்றுக்கொண்ட பணத்தை திறைசேரிக்கு பெற்றுக்கொண்டு இன்றும் கடன்களை செலுத்திக்கொண்டுள்ளோம். 

எனவே இந்த விடயங்கள் குறித்து முன்னாள் பிரதமருடன் நான் விவாதத்திற்கு செல்லவில்லை. எமது முன்னாள் தலைவர் அவர். ஆனால் உண்மைகளை கூற வேண்டும் என்றார்.