திருக்கோவில் காவல் நிலையத்தில் கடமையாற்றிவரும் காவலருக்கு உடனடி இடமாற்றம்!

IMG 7041
IMG 7041

அம்பாறை திருக்கோவில் காவல் நிலையத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தையடுத்து அங்கு கடமையாற்றிவரும் அனைத்து காவல்துறையினரையும் உடன் இடமாற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் இந்த சூட்டு சம்பவம் தொடர்பாக காவல்துறை அத்தியட்சகர் தலைமையில் விசாரணை இடம்பெற்று வருவதாக உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த 24ம் திகதி இரவு காவல்துறை சாஜன் ஒருவர் காவல்துறையினர் மீது மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 4 காவல்துறையினர் உயிரிழந்ததுடன் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் துப்பாக்கி சூடு நடாத்திய காவல்துறை சாஜன் துப்பாக்கிகளுடன் காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திற்கு காவல்துறைமா அதிபர்,  கிழக்கு பிராந்திய சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் உட்பட பல காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று நிலமைகளை ஆராய்ந்து இச் சம்பவம் தொடர்பாக காவல்துறை அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் குறித்த காவல் நிலையத்தில் கடமையாற்றி வந்த காவல்துறை உத்தியோகத்தர்கள் அனைவரையும் முதலில் இடமாற்றுமாறு ஆலோசனையின் கீழ் கட்டம் கட்டமாக கடமையாற்றிவரும் காவல்துறையினரை இடமாற்றும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இதனடிப்படையில் இன்று குற்றதடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உட்பட சிலர் உடனடியாக வேறு காவல் நிலையங்களுக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.