தீக்கிரையான தாய், மகள் – தடயவியல் காவற்துறையினர் மீட்ட பொருட்கள்!

1642848962 Fire News 8
1642848962 Fire News 8

கிளிநொச்சி தருமபுரம் காவற்துறை பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் கடந்த 20 ஆம் திகதி நள்ளிரவு 11.50 மணியளவில் 47 வயதுடைய ஆனந்தராசா சீதேவி என்ற 07 பிள்ளைகளின் தாயாரும் அவரது மகளான 17 வயதுடைய லக்சிகா ஆகியோர் தீக்கிரையான நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக நேற்று (21) தருமபுர காவற்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தருமபுரம் காவற்துறையினர் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் சம்பவ இடத்தை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் இன்று (22) காலை பார்வையிட்டார்.

குறித்த சடலங்களை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் மற்றும் பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அத்துடன் அப்பகுதியில் போத்தல் ஒன்றில் பெற்றோலும், கத்தி ஒன்றும் மற்றும் தொலைபேசி ஒன்றும் தடயவியல் காவற்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக தர்மபுரம் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.