விபத்தில் சிறுவன் மரணம்

1644117158 MANAR ACCDENT 2
1644117158 MANAR ACCDENT 2

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி, ஓலைத்தொடுவாய் பகுதியில் நேற்று (5) காலை இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் கொண்ணையன் குடியிருப்பைச் சேர்ந்த குடும்பம் ஒன்று தங்கள் கிராமத்தில் இருந்து பேசாலை பகுதியிலுள்ள நடுக்குடா பகுதிக்கு சென்று விட்டு மறு நாளான நேற்று (5) காலை வீடு திரும்பியபோது, ஓலைத்தொடுவாய் வீதிக்கூடாக முச்சக்கர வண்டி திரும்பிய போது பின் புறமாக தலைமன்னார் பகுதியிலிருந்து மன்னார் நோக்கி வேகமாக வந்த மீன் ஏற்றும் கூலர் வாகனம் குறித்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் முச்சக்கர வண்டியும், பயணித்தவர்களும் தூக்கி வீசப்பட்டனர்.

முச்சக்கர வண்டி பலத்த சேதத்திற்கு உள்ளாகி வீதிக்கு அருகாமையில் வெள்ள நீருக்குள் வீசி எறியப்பட்ட நிலையில் காணப்பட்டது.

பலத்த காயங்களுக்கு உள்ளான தாய் சந்தியோகு செல்வி (வயது- 30), மகன்களான கெபின் கரன் (வயது -6), கானோர் ( வயது- 1) ஆகியோருடன் முச்சக்கர வண்டி சாரதியும் பலத்த காயங்களுடன் பேசாலை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின் தீவிர சிகிச்சைக்காக மன்னார் பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.

இந்த நிலையில் மகன் கெபின்கரன் மன்னார் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

ஏனைய மூவரும் தொடர்ந்து தீவிர சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். குறித்த கூலர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, விபத்து தொடர்பாக காவற்துறையினர் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.