நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு ஜனாதிபதியிடம் சபாநாயகர் கோரிக்கை!

Mahinda Yapa Abeywardena
Mahinda Yapa Abeywardena

நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் குறித்து கலந்துரையாடுவதே இதன் நோக்கமாகும் என சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

கடந்த 6 ஆம் திகதி சபாநாயகரினால் நாடாளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இதேவேளை, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பதவி விலகல் காரணமாக புதிய பிரதமரை தெரிவு செய்யும் பொறுப்பு நாடாளுமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்று நாளை கூட்டப்பட்டுள்ளது.

நாளை பிற்பகல் 3 மணிக்கு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசியல் நெருக்கடி மற்றும் நாட்டில் நிலவும் முரண்பாடுகள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படவுள்ளது