நேற்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் குறைப்பு!

bus 1
bus 1

நேற்று நள்ளிரவு முதல் சாதாரண பேருந்து பயண கட்டணம் 11.14 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 38 ரூபாவாக இருந்த ஆகக்குறைந்த பேருந்து பயண கட்டணம் 34 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதென தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில் 20 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்ட பேரூந்து கட்டணத்திலிருந்து, 10 சதவீதத்தினை குறைத்தல் மற்றும் அண்மையில் குறைக்கப்பட்ட டீசல் விலையைக் கருத்தில் கொண்டு பேருந்து பயண கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

350 வெவ்வேறு சந்தர்ப்பங்களுக்கான கட்டணங்கள் இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளது.

வழமையான பேரூந்து சேவைகளுக்கு மாத்திரமே இவ்வாறு பேரூந்து கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

புதிய கட்டணத் திருத்தங்களுக்கு அமைய கட்டணங்கள் அறவிடப்படுகின்றதா? என்பதை பரிசோதிப்பதற்காக நடமாடும் பரிசோதகர்கள் சேவையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

ஏதெனுமொரு வகையில் பற்றுச்சீட்டுகளை வழங்காமை அல்லது அதிக கட்டணத்தினை அறவிட்டால், 1955 என்ற இலக்கத்துக்கு அழைப்பினை ஏற்படுத்தி முறைப்பாடொன்றைப் பதிவு செய்யுமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.

இதேவேளை, நேற்று நள்ளிரவு முதல் சில பேருந்து சங்கங்கள் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளன.

கிவ்.ஆர் முறைமைக்கமைய போதுமான அளவு டீசல் கிடைக்கவில்லை என தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை சில பேருந்து சங்கங்கள் முன்னெடுக்கின்றன.

அகில இலங்கை தனியார் பேருந்து நிறுவனங்களின் சம்மேளனம், அனைத்து மாகாணங்களுக்கிடையிலான பேருந்து சங்கம், பொதுஜன ஐக்கிய பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மற்றும் அகில இலங்கை ஐக்கிய பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளன.