தீக்காயங்களுடன் கணவன் – மனைவி சடலமாக மீட்பு

1664590887 jaf 2
1664590887 jaf 2

வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதியில் உள்ள வீடொன்றில் கணவனும் மனைவியும் தீக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை 4.15 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று காவற்துறையினர் தெரிவித்தனர்.

வல்வெட்டித்துறை நெடியகாடு, ஏஜிஏ ஒழுங்கையைச் சேர்ந்த சரவணபவா ரஞ்சித்குமார் (வயது -30) அவரது மனைவி கிருசாந்தினி (வயது -26) என்ற இருவருமே சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

வல்வெட்டித்துறை காவற்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தம்பதி உறங்கிய அறையில் தீ பற்றி எரிவதைக் கண்ட வீட்டிலிருந்தவர்கள் அறையை உடைத்து உள்நுழைந்த போது இருவரும் தீயில் எரிந்து சடலமாகக் காணப்பட்டதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

தீ ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.