வவுனியா இராசேந்திரங்குளம் சமுர்த்தி உத்தியோகத்தர்க்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் இன்று (24) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இராசேந்திரங்குளம், விநாயகபுரம், பாரதிபுரம், பொன்னாவரசன்குளம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய சமுர்த்தி உத்தியோகத்தர் குறித்த பகுதியில் கடமையேற்று 3 வருடங்களாகிய நிலையில் தற்போது இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்தே குறித்த கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த மக்கள், குறித்த உத்தியோகத்தர் கிராம மக்களுக்கு உதவிகள் செய்ய கூடியவர் என்பதோடு கொரோனா காலங்களில் மக்களின் பாதுகாப்புக்காக மக்களின் வீடுகளுக்கே சமுர்த்தி கொடுப்பனவுகளையும் வழங்கியிருந்தார். மக்களின் வீடுகளுக்கு நேரடியாக வந்து அவர்களின் நிலை அறிந்து செயற்படுபவர்கள். இவ்வாறான ஒருவரை இடமாற்றம் செய்ய அனுமதிக்க முடியாது என தெரிவித்தனர்.
இதன்போது வவுனியா தெற்கு பிரதேசசபை உறுப்பினரும், அகில இலங்கை இளைஞர் முன்னணியின் தலைவருமான விக்டர்ராஜ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடியதுடன் பொதுமக்களால் வழங்கப்பட்ட மகஜரையும் பெற்றதுடன் அதனை அரசாங்க அதிபரிடம் சேர்ப்பிப்பதாகவும் உறுதிமொழி வழங்கியதை அடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.