எரிபொருள் கொள்வனவுக்காக ரஷ்யாவிடம் பேச்சு நடத்தும் இலங்கை

ali

சலுகை விலையில் எரிபொருளை பெற்றுக்கொள்ள ரஷ்யாவுடன் பல சுற்றுப்பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அமைச்சர் அலி சப்ரி இதனை தெரிவித்தார்.

சர்வதேச நீதி வரையறைக்கு உட்பட்டு ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ரஷ்யா மற்றும் யுக்ரேன் ஆகிய நாடுகளுக்கிடையில் இடம்பெற்று வரும் யுத்தம் காரணமாக இலங்கை நேரடியாக பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

அது மாத்திரமின்றி, நிலக்கரி, தானியவகைகள், மற்றும் உரம் ஆகியனவற்றை இறக்குமதி செய்வதிலும் இலங்கை பாரிய சவால்களை எதிர்நோக்குவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே ரஷ்யா மற்றும் யுக்ரேன் ஆகிய நாடுகளுக்கிடையிலான யுத்தத்திற்கு தீர்வு காணப்படுவது அவசியமாகும் எனவும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

யானைகள் சண்டையிடும் போது புற்தரையானது நாசமாவது இயற்கையின் விதி என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தமை இக்காலக்கட்டத்திற்கு மிகவும் பொருந்தும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.