வவுனியா மாவட்டத்தில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக ஈழமக்கள் ஜனநாயக கட்சி இன்று (19.01) கட்டுப்பணம் செலுத்தியது.
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் தமது கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தனர்.
வவுனியா மாவட்டத்தில் உள்ள மாநகரசபை உட்பட 5 உள்ளுராட்சி மன்றங்களிலும் போட்டியிடுவதற்காகவே இவ்வாறு கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. இதன்போது வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.
இதன் போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் ஈழமக்கள் ஜனநாயக கட்சி வவுனியா மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியிருக்கின்றோம். கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வவுனியா நகரசபை மற்றும் தெற்கு தமிழ் பிரதேச சபை ஆகியவற்றில் போட்டியிட்டிருந்தோம். இம் முறை மக்களுக்கு ஆற்றிய சேவையின் அடிப்படையில் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணங்களையும் செலுத்தியிருப்பதாக தெரிவித்தார்