அரசியலுக்காக தமிழ் அரசியல் கைதிகளையும், தமிழர்களையும் பாவிக்க வேண்டாம்- மா.சத்திவேல்

IMG 20220708 203537 2
IMG 20220708 203537 2

அரசியலுக்காக தமிழ் அரசியல் கைதிகளையும், தமிழர்களையும் பாவிக்க வேண்டாம் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.


அவரால் இன்று (30.01.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


“அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஒரு சில தமிழ் அரசியல்வாதிகளே தடையாக இருக்கின்றனர்” என குறித்த நேரத்தில் வெடிக்கும் அரசியல் குண்டை நீதி அமைச்சர் வீசி இருக்கின்றார். அது செயல் இழந்த குண்டு. அவரது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பதை அனைவரும் அறிவர். உங்கள் அரசியலுக்காக தமிழ் அரசியல் கைதிகளையும், தமிழர்களையும் பாவிக்க வேண்டாம் மீண்டும் கூறுவதோடு குறித்த உள்நோக்கம் கொண்ட அரசியலை அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு வன்மையாக கண்டிக்கின்றது.


அரசியல் கைதிகள் விடுவிக்கப்படல் வேண்டும் என தமிழர்களும் அரசியல் கைதிகளும் பல்வேறு போராட்டங்களை கடந்த காலத்தில் நடத்திய போது நாட்டில் அரசியல் கைதிகளே இல்லை. பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களே உள்ளனர். அவர்களை நீதிமன்ற தீர்ப்புக்கு அப்பால் விடுதலை செய்ய முடியாது என சிங்கள பேரினவாத அரசியலை முன்னகர்தியவரே தற்போது தமிழ் அரசியல்வாதிகளை குற்றவாளி கூண்டில் நிறுத்தியுள்ளார்.
தமிழர்கள் விரும்பாத அரசியல் தீர்வான 13 ஆம் திருத்தத்தை முன்னகர்த்த இந்தியாவிற்கு தாளம் போட்டு கொடி பிடித்துக் கொண்டிருக்கின்ற தமிழ் அரசியல் தலைமைகள் மீது நாம் கோபத்தோடு உள்ளோம். 13 தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வல்ல. அது தீர்விற்கான ஆரம்ப புள்ளியும் அல்ல. அது பூஜ்ஜியமே.
நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் அரசியல் தீர்வு என தம்பட்டம் அடித்த ஜனாதிபதி அரசியல் யாப்பில் உள்ள 13 ஆம் திருத்தத்தையே அமல்படுத்த முடியாது பேரினவாதிகளின் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கையில் இவர்கள் எத்தகைய அரசியல் தீர்வையும் தரப்போவதில்லை என ஆட்சியாளர்கள் மீதும் சிங்கள பேரின வாதிகள் மீதும் தமிழ் தமிழர்கள் வெறுப்பும் கோபம் கொண்டிருக்கின்ற சூழலில் நீதி அமைச்சர் சிறுபிள்ளைத்தனமாக தமிழர்களின் கோபத்தை திசை திருப்ப நினைப்பது நகைச்சுவையே.


அரசியல் கைதிகள் அனைவரையும் அரசியல் தீர்மானம் எடுத்து நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படல் வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழர்களின் கோரிக்கை. அக் கோரிகையினை அலட்சியப்படுத்தி பொது மன்னிப்பின் கீழ் சில்லறைகளாக அரசியல் கைதிகளை விடுப்பது தமிழர்களையும், அரசியல் கைதிகளையும் அவமானப் படுத்தும் செயலாகும். இதனையும் வன்மையாக கண்டிக்கின்றோம்.


உங்கள் சுதந்திர தினத்தில் மூன்று அரசியல் கைதிகள் வெளியில் வர உள்ளதாக அறிகின்றோம் அவர்களோடும் குடும்பத்தாருடன் நாமும் மகிழ்ச்சிகின்றோம் ஒட்டுமொத்த அரசியல் கைதிகளும் அரசியல் தீர்மானம் மூலம் விடுதலை செய்வது என்பது எமக்கான அரசியல் கௌரவம். அரசியல் கைதிகளுக்கான கௌரவமுமாகும் என்பதை நீதி அமைச்சரும் ஆட்சியாளர்களும் உணர வேண்டும்.


நீதி அமைச்சர் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் விரும்பாத அரசியல் தீர்வை கூட நடைமுறைப்படுத்த முடியாமைக்கு காரணம் பேரின இனவாத சிந்தனையை தவிர சட்ட பிரச்சனை அல்ல. ஆனால் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு உங்கள் சட்டம் காரணமாக உள்ளது. நீண்ட காலம் சிறை வாழ்வை அனுபவித்து வரும் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என சிங்கள அரசியல்வாதிகளே பகிரங்கமாக கூறு நிலையில் பயங்கரவாத தடை சட்டத்தை திருத்துங்கள். சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள். அதனை விடுத்து உங்கள் அரசியலுக்காக எம்மை பயன்படுத்தி அரசியல் குளிர் காய நினைப்பது ஈனத்தனமான அரசியலாகும்.