தேசிய புலனாய்வுச் சட்டமூல வரைவிற்கு அரசாங்கம் அனுமதி!

defence1
defence1

தேசிய பாதுகாப்பினை பாதுகாக்கும் வகையில் நாட்டின் அனைத்து புலனாய்வு சேவைகளையும் வலுப்படுத்தி ஒழுங்குபடுத்தும் வகையில் தேசிய புலனாய்வு சட்டமூல வரைவிற்கு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட புதிய தேசிய புலனாய்வு சட்டமூல வரைவிற்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று முன்தினம் (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன இதனை தெரிவித்தார்.

தேசிய புலனாய்வு சட்டமூல வரைவினை தயார் செய்வதற்காக சட்ட வரைஞரின் ஆலோசனைகள் பெறப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

புலனாய்வு நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கு தேவையான சட்ட விதிகளில் சில குறைபாடுகள் காணப்படுவதால் புலனாய்வுத்துறையின் செயற்பாடுகளை முன்னெடுக்க தடையாக காணப்படுவதை நிவர்த்தி செய்யும் வகையில் இது அமைந்துள்ளது.

இப்புதிய சட்டமூலமானது, நாட்டின் பாதுகாப்பு நிலைமையை கண்காணிப்பதன் மூலமும் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குவதன் மூலமும் தேசிய பாதுகாப்பை நிருவகிக்க புலனாய்வுத் துறை அமைப்புகளுக்கு அதிகாரங்களை வழங்கும் என அமைச்சர் தெரிவித்தார்.