உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்ட 3 சந்தேகநபர்களை விடுவிப்பதாக தெரிவித்து பணத்தை பெற்றுக்கொண்ட மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொரட்டுவ வீதி கொட்டிக்காவத்தை என்ற முகவரியை சேர்ந்த வாகன உதிரிப்பாக விற்பனையில் ஈடுபட்டுள்ள மொஹமட் யூசுப் மொஹமட் ஸ்மீத் என்ற நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் அதிகாரிகளுக்கு பணத்தை வழங்கி சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை விடுவிக்க முடியும் என்று சந்தேக நபர்களின் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதற்கு அமைவாக தற்பொழுது தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மூவரின் உறவினர்கள் 17 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாவை இந்த சந்தேக நபரிற்கு வழங்கியுள்ளனர்.
இது தொடர்பாக குற்ற புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு ஒன்று கிடைத்ததை தொடர்ந்து பயங்கரவாத தடுப்பு பிரிவினால், பணத்தை பெற்றுக்கொண்டதாக கூறப்படும் மேலே குறிப்பிடப்பட்ட சந்தேக நபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சட்டத்தரணியுமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.