பின்னிற்கும் ஐங்கரநேசனும் ,கஜேந்திரகுமாரும் முன்னேறும் விக்னேஸ்வரன் கூட்டணி

news
news

வடக்கின் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் உருவாக்கப்படுகின்ற புதிய கூட்டணி தொடர்பான அறிவிப்புக்கள் தைப்பூசத்தில் வெளியிடப்பட இருக்கின்றது.

இந்தக் கூட்டணியில் சிறிகாந்தா-சிவாஜிலிங்கம் தலைமையிலான கட்சியும் மீள இணைந்து கொள்ளப் போவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமான விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் அரசியல் பரப்பில் புதுதிய கூட்டணியொன்று உருவாக்கும் முயற்சிகள் கடந்த பல மாதங்களாக நடைபெற்று வந்தன.

இந்தக் கூட்டணியில் பல்வேறு கட்சிகள் பொது அமைப்புக்கள் எனப் பலரும் இணைந்து கொள்ளப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆயினும் அதிலும் குழப்பங்கள் ஏற்பட்டிருப்பதாக பல்வேறு செய்திகளும் ஊடகங்களில் வெளிவந்திருந்தன.

இவ்வாறான நிலைமையில் அந்தக் கூட்டணி உருவாக்கம் முயற்சிகள் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கின்றன. இதற்கமைய எதிர்வரும் தைப்பூசத்தில் அக் கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு கூட்டணி தொடர்பான அறிவிப்புக்களும் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் கூட்டணியில் இணையுமென எதிர்பார்க்கப்பட்டு வந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஐங்கரநேசன் தலைமையிலான தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ஆகிய கட்சிகள் இணைந்து கொள்ளவில்லை என்றும் தெரிய வருகிறது.

அதே நேரத்தில் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி சுரேஸ்பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, அனந்தி சசிதரன் தலைமையிலான ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகியன இணைந்து கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளன.

இதே வேளை தமிழிழீழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பில் இருந்து வெளியேறிய சிறிகாந்தா- சிவாஜி லிங்கம் ஆகியோர் தமிழ்த் தேசிய கட்சியொன்றை ஆரம்பித்து விக்கினேஸ்வரனின் புதிய அணியில் இணைந்து செயற்படப் போவதாக அறிவித்திருந்தனர்.

இவ்வாறான நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விக்னேஸ்வரன் தலைமையில் உருவாக்கப்படுகின்ற புதிய கூட்டணி தொடர்பில் கடும் விமர்சனங்களை முன்வைத்த சிறிகாந்தா அந்தக் கூட்டில் இணையப் போவதில்லை என்றும் தாம் தனித்து போட்டியிடப் போவதாகவும் அறிவித்திருந்தார்.

ஆயினும் தற்போது விக்னேஸ்வரனின் புதிய கூட்டு தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் வரவிருக்கின்ற நிலையில் அந்தக் கூட்டணியில் சிறிகாந்தா தலைமையிலான தமிழ்த் தேசிய கட்சியும் இணைந்து கொள்ளப் போவதாக தெரிவிக்கப்படுகின்றது.

விக்னேஸ்வரன் அணியுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் சமரசம் செய்யப்பட்டு இன்னும் சில தினங்களில் மேற்கொள்ளப்படவுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அந்தக் கட்சியும் கையொப்பம் இடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் கஜேந்திரகுமார், ஐங்கரநேசன் ஆகியோர் தலைமையிலான கட்சிகள் இரண்டும் இந்தக் கூட்டில் இணையப் போவதில்லை என்றும் தெரிய வருகிறது.