2015 முதல் 2018 வரையான காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழுவின் மூலம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் நாளை (23.09.2019) அமைச்சர்களான சஜித் பிரேமதாஸ, அகிலவிராஜ் காரியவசம், பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலையாக உள்ளனர்.
இதேவேளை கடந்த 3 வருடங்களாக வீடமைப்பு அதிகார சபையின் அனுமதியின்றி, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பணியாளர்களுக்கு மேலதிகமாக ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமை தொடர்பில் அமைச்சர் சஜித் பிரேமதாஸவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக ஆணைக்குழு தகவல்கள் தெரிவித்துள்ளன.
பாடசாலை மாணவர்களுக்கான சீருடைக்கு பதிலாக, வவுச்சர்களை வழங்குதல் மற்றும் டெப் கணினிகளை வழங்குவதில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பான முறைப்பாட்டுக்கு அமைய, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது.
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில், இடம்பெற்ற சம்பவம் ஒன்று தொடர்பான முறைப்பாட்டுக்கு அமைய, பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.சுவாமிநாதனிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாகவும் ஆணைக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன.