இலங்கையின் மேலும் பல படையதிகாரிகளுக்கு அமெரிக்கா பயணத்தடையை விதிக்கக்கூடும் என்று ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.
எனினும் இது வெளிப்படையாக அறிவிக்கப்படாமலேயே மேற்கொள்ளப்படலாம் என்றும் அந்த செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
முன்னதாக போர்க்குற்றங்கள் தொடர்பில் இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா பயணத்தடையை விதித்துள்ளது.
இதனையடுத்து அமெரிக்காவினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட நல்லிணக்க யோசனையில் இருந்து விலகிக்கொள்வதாக இலங்கை அறிவித்தது.
அத்துடன் அமெரிக்கா தொடர்ந்தும் வலியுறுத்தி வந்த எம்சிசி உடன்படிக்கையிலும் கைச்சாத்திடப் போவதில்லை என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதுவும் நாட்டைக் காட்டிக்கொடுத்து உடன்படிக்கையில் கைச்சாத்திடப்போவதில்லை என்று ராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் போர்க்குற்றங்கள் தொடர்பில் மேலும் பல படையதிகாரிகளுக்கு அமெரிக்காவுக்குள் பிரவேசிக்க தடைவிதிக்கப்படக்கூடும் என்று ஆங்கில செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.