நீராவியடி பிள்ளையார் கோவில் பிரச்சனையில் நீதிகோரி ஆர்ப்பாட்டப் பேரணி

Capture 1
Capture 1

முல்லைத்தீவு நீதிமன்றத்தின் கட்டளையை அவமதித்து சட்டத்தை கையில் எடுத்த ஞானசாரதேரரும் அவரின் தலைமையிலான இனவெறிக் கும்பலின் உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி எதிர்வரும் 5 ம் திகதி சனிக்கிழமை காலை 10 மணியளவில் யாழில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக நடைபெறவுள்ள போராட்டத்தில் பேதங்களின்றி அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நீராவிடியடிப் பிரச்சனையில் நீதிகோரி முன்னெடுக்கப்படுகின்ற இந்த ஆர்ப்பாட்டப் பேரணி எவ்வித கட்சி அரசியலையும் கலக்காமல் ஒன்றுபட்ட தமிழினத்தின் உணர்வலைகளை ஸ்ரீலங்கா அரசுக்கு உணர்த்தும் வகையில் ஓர் பொதுமக்கள் ஆர்ப்பாட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்து நீதி கோரும் குரல்கள் பேரலையாக எழுவதை உறுதிப்படுத்த முன்வருமாறு யாழ் மாவட்டத்தில் செயற்படும் சகல சமய, சமூக பொது அமைப்புக்களையும் தொழிற்சங்கங்கள், வர்த்தக சங்கங்கள் மற்றும் யாழ் பல்கலைக்கழக சமூகம் உட்பட அனைத்து தரப்பினரையும் நாம் அன்புடன் அழைக்கின்றோம்.

மேலும் தமிழ் அரசியல் கட்சிகள் அனைவற்றினதும் ஆதரவையும் பங்களிப்பையும் இந்த போராட்டத்தில் நாம் நாடி நிற்பதாகவும் கட்சியின் மாவட்டக் கிளைச் செயலாளர் தெரிவித்துள்ளர்.