பாடசாலை கடமை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த ஆசிரியை ஒருவர் முதலாம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கம்பளை கீரப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த சந்திமா நிஸன்சலா என்ற 27 வயதுடைய ஆசிரியையே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அட்டன் ஸ்ரீபாத வித்தியாலயத்தில் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியையாகக் கடமையாற்றி வந்த குறித்த ஆசிரியை சம்பவ தினமான செவ்வாய்க்கிழமை இரவாகியும் வீட்டுக்கு வராததையடுத்து ஆசிரியையின் தாய் மகள் கடமையாற்றும் பாடசாலை அதிபரை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார்.
குறித்த ஆசிரியை வழமைபோல் அங்கிருந்து புறப்பட்டு விட்டதாக அதிபர் கூறியதையடுத்து, பதற்றமடைந்த தாய் இது குறித்து கம்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார் மறுநாள் புதன்கிழமை குறித்த ஆசிரியையின் வீட்டருகே நிதாஸ் மாவத்தையில் அமைந்துள்ள தனியார் கல்வியகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராவினை பரீட்சித்து பார்த்த பொழுது மாலை 4 மணி ஆறு நிமிடமளவில் ஆசிரியை வீடு நோக்கி செல்வது பதிவாகியிருந்துள்ளது.
இதிலிருந்து குறித்த ஆசிரியை தனது வீட்டுக்கு 100 மீற்றர் இடைவெளிக்குள்ளேயே காணாமல் போயுள்ளமை தெரிய வந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.