மக்களை ஏமாற்றாது சம்பந்தனை ஏமாற்றிய விக்னேஸ்வரன் – அருந்தவபாலன் பதிலடி

arunthavapalan
arunthavapalan

சுமந்திரன் கூறுவதுபோல சம்பந்தர் விக்னேஸ்வரனிடம் ஏமாந்தார் என்பது உண்மையே என தமிழ் மக்கள் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் க.அருந்தவபாலன் தெரிவித்துள்ளார்.

சம்பந்தன் நம்பி ஏமாந்தது விக்னேஸ்வரனை மட்டுமே என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இக்கருத்துத் தொடர்பாக தமிழ் மக்கள் கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும் தமிழ்த் மக்கள் தேசியக் கூட்டணியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளருமான அருந்தவபாலன் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது,

கொழும்பு வாழ்க்கை, மேட்டுக்குடிப் பின்னணி, தமிழ் மக்களுக்கு நன்றாக அறிமுகமான முகம், போதாக்குறைக்கு சிங்கள மணவுறவு போன்றவற்றை வைத்து தங்களைப்போல தமிழ் மக்களை ஏமாற்ற
பெரிதும் பொருத்தமானவர் என நம்பிய சம்பந்தன் விக்னேஸ்வரனிடம் ஏமாந்தது உண்மையே. ஆனால் தமிழ் மக்கள் விக்னேஸ்வரனிடம் ஏமாறவில்லை. அவரும் தமிழ்மக்களை ஏமாற்றவில்லை.
சம்பந்தன் எதிர்பார்த்தது போல,

  • தேர்தல்களில் குறிப்பாக மாகாணசபைத்
    தேர்தலில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை அவர் கைவிடவில்லை
  • ஒற்றையாட்சியை சமஸ்டி என்று கூறி
    மக்களை ஏமாற்றவில்லை
  • இனப்படுகொலைத்தீர்மானத்தை நிறைவேற்றாது விடவில்லை
  • பதவி,பணம்,சுகபோகங்களுக்காக
    விலைபோகவில்லை
  • சர்வதேசத்தில் இலங்கையரசைப் பிணை
    எடுப்பதற்கு துணை நிற்கவில்லை
  • கணக்கெதுவும் காட்டாத கட்சிக்காக
    வெளிநாட்டில் நிதி சேகரிக்கப் போகவில்லை
  • இவை எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களின் திருகுதாளங்களை மறைப்பதற்குத் துணை போகவில்லை
    என்பதனால் விக்னேஸ்வரனிடம் ஏமாந்தது உண்மையே

விக்னேஸ்வரன் தான் சொன்னதுக்கு மாறாக தமிழ் மக்கள் பேரவையை அரசியல் கட்சியாக மாற்றவில்லை.
பேரவை வேறு. தமிழ்மக்கள் கூட்டணி வேறு. இக் கட்சி கூட தமிழ்மக்களின் வேண்டு கோளைப் புறந்தள்ளமுடியாது உருவாக்கப்பட்டது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ்மக்களுக்கு நேர்மையாக இருந்திருந்தால் இக்கட்சி தோன்றவேண்டிய அவசியம் இருந்திருக்காது. மேலும் நல்லாடசியிடம் சம்பந்தன் ஏமாறவில்லை எனச் சுமந்திரன் சொல்வது உண்மையானால் ஏமாந்துவிட்டோம் என தலைவர் உட்பட அவரது கட்சியினர்
சொன்னது பொய்யா? அவரது கட்சியினர் சொன்னது பொய்யானால் சுமந்திரனும் சம்பந்தனும்
எமது மக்களை மட்டுமல்ல அவரது கட்சியினரையும் ஏமாற்றியது உண்மையாகும்.