நேற்றைய கொரோனாத் தொற்றாளர்களில் 17 பேர் கடற்படையினர்!

r4es
r4es

இலங்கையில் நேற்றுப் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள 20 கொரோனாத் தொற்றாளர்களில் 17 பேர் கடற்படையினர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

ஏனைய மூவரில் இருவர் கடற்படையினருடன் நெருக்கமாகப் பழகிய உறவினர்கள் என்றும், மற்றவர் டுபாயிலிருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவர் என்றும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களில் 455 பேர் கடற்படையினர் என்று கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியான சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அவர்களில் இதுவரை 52 பேர் கொரோனாத் தொற்றிலிருந்து குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர் என்று கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.