நிபந்தனைகளுடன் திறக்கப்படவுள்ள சிகையலங்கார நிலையங்கள்!

.jpg
.jpg

இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமுல்ப்படுத்தப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையிலும், முஸ்லிம்களின் நோன்பு பெருநாள் வரவுள்ள நிலையிலும் மக்கள் பாதுகாப்பு கருதி வியாபார உரிமையாளர்கள் சேவை செய்யும் நோக்கில் ஓட்டமாவடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் விசேட ஒன்றுகூடல் நடைபெற்றுள்ளது.

குறித்த ஒன்றுகூடல் இன்று (13) ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜுத் தலைமையில் நடைபெற்றது.

இவ் ஒன்றுகூடலில் உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அப்கர், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி திருமதி.எஸ்.எஸ்.எம்.வசீம், ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் எஸ்.சிஹாப்தீன், வாழைச்சேனை பொலிஸ் உத்தியோகத்தர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், ஓட்டமாவடி சிகையலங்காரம் மற்றும் ஆடை வியாபார நிலைய உரிமையாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

நோன்பு பெருநாள் வரவுள்ளமையால் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலுள்ள சிகையலங்கார உரிமையாளர்கள் மற்றும் ஆடை வியாபார நிலைய உரிமையாளர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். வியாபார நிலையங்களின் மக்கள் சமூக இடைவெளியினை வேணுவது கட்டாயமானதாகும்.

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக சிகையலங்கார உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு முடிகளை மாத்திரம் வெட்ட வேண்டுமே தவிர முகச்சவரம் செய்ய முடியாது என்ற சுற்று நிருபத்திற்கு ஏற்ப தங்களது கடமையைச் செய்ய வேண்டும் என்றும், பாதுகாப்பு தொடர்பிலான விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் வினியோகிக்கப்படும் என்றும் தீர்மானம் செய்யப்பட்டது.

மேலும் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலுள்ள சிகையங்கார நிலையம் என்பவற்றினை ஓட்டமாவடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பொலிஸார் ஆகியோரினால் பரிசோதனைகளை மேற்கொள்ளப்படும் போது விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜுத் கூறியுள்ளார்.