சுமந்திரன் மக்கள் விடுதலை முன்னணியின் மே தின ஊர்வலத்தில் கலந்துகொண்டார் என்பதற்காக அவருடைய கொள்கைகளை தாங்கள் பின்பற்வில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே இ.சந்திரசேகர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சந்திரசேகர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்…
நான் சுமந்திரன் தொடர்பாக முன்வைக்கும் கருத்துக்கள் அனைத்தும் அரசியல் ரீதியான விமர்சனங்கள்.
சுமந்திரனோடு எங்களுக்கு தனிப்பட்ட ரீதியான எந்தவொரு குரோதமும் கிடையாது.
அதே போன்று இங்கு இருக்கின்ற அரசியல் வாதிகள் தொடர்பாக எங்களுக்கு தனிப்பட்ட குரோதங்கள் கிடையாது.
நாங்கள் ஒரு அரசியல் கட்சி என்ற வகையிலே இந்த நாட்டின் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்படுகின்ற ஒரு சூழல் ஏற்பட்டது.
விசேடமாக 2018 ஆண்டு ஒக்டோபர் மாதம், ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்படுகின்ற போது மக்கள் விடுதலை முன்னணியாகிய நாங்கள் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம்.
அந்த நடவடிக்கையிலே நாட்டில் இருக்கின்ற அனைத்து கட்சிகளையும் ஒன்றினைத்துக்கொண்டு , ராஜபக்ச மற்றும் சிறிசேனவுடைய சட்டவிரோதமான அரசாங்கத்திற்கு நடவடிக்கை எடுத்த காலத்திலேயே மக்கள் விடுதலை முன்னணியாகிய நாங்கள் யாழ்ப்பாணத்தில் நடாத்திய மே தின ஊர்வலத்தில் சுமந்திரன் அவர்கள் அவர்களுடைய ஊர்வலத்துக்கு செல்லுகின்ற வேளையிலே எங்களுடைய கட்சி தலைவரை கண்டவுடன் எங்களோடு இனைந்துகொண்டு சுமார் 10- 15 நிமிடம் எங்களோடு ஊர்வலத்தில் கலந்துகொண்டார் என்பது உண்மை.
அதில் எந்தவிதமான கருத்து வேறுபாடுகளும் கிடையாது.
அதற்காக நாங்கள் சுமந்திரனோடு அல்லது சுமந்திரன் பின்பற்றுகின்ற கொள்கைகளோடு உடன்பட்டிருக்கின்றோம் என்பது அர்த்தப்படாது என இ.சந்திரசேகர் மேலும் தெரிவித்துள்ளார்.