முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவு கூர வேண்டியது தமிழர்களின் தார்மீகம்;வி.எஸ். சிவகரன்

NW16
NW16

நல்லாட்சி அரசுடன் கூட்டுக் குடும்பம் நடாத்திய கூட்டமைப்பாலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு எந்த நீதியும் பெற்றுக் கொடுக்கவில்லை.பறனகம ஆணைக்குழு காணாமல் போனோருக்கான அலுவலகம் எல்லாமே ஏமாற்று வித்தைகள் தான் என தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ். சிவகரன் தெரிவித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை மாலை அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயத்தில்.

இந்த நூற்றாண்டின் திட்டமிட்ட மிகப்பெரிய இனப் படுகொலையாகிய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழ் மக்கள் நினைவு கூர வேண்டியது தார்மீக கடமையாகும்.

11 ஆண்டுகள் ஆகிவிட்ட போதும் ஒரு இலட்சத்து 46 ஆயிரத்து 679 பேர்கள் (146679)காணாமல் போனார்களோ அல்லது படுகொலை செய்யப்பட்டார்களோ என்பது இது வரை முடிவில்லை.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டமும் பல வருடங்களை கடந்து பல உறவினர்கள் இறந்து போயுள்ளனர்.
எத்தனையோ போராட்டங்கள் நடாத்தியும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் வரை சென்றும் புலம் பெயர்ந்த தேசம் எங்கும் போராட்டம் நடாத்தியும் எந்த பயனும் இதுவரை ஆகவில்லை.

நல்லாட்சி அரசுடன் கூட்டுக் குடும்பம் நடாத்திய கூட்டமைப்பாலும் காணாமல் ஆக்கப்பட்வர்களுக்கு எந்த நீதியும் பெற்றுக் கொடுக்கவில்லை.

பறனகம ஆணைக்குழு காணாமல் போனோருக்காண அலுவலகம் எல்லாமே ஏமாற்று வித்தைகள் தான்.
இலங்கை அரசு சர்வதேச சமூகம் தமிழ் தேசிய கூட்டமைப்பு எல்லோரும் ஏமாற்றிவிட்டார்கள்.

எல்லாமே வெறுமையாக்கப்பட்டுள்ளன.அதனால் பலர் எதிர் காலத்தின் மீது நம்பிக்கையை இழந்து விட்டனர்.ஆகவே இனப்படுகொலை நடந்தது 11 ஆண்டுகள் கடந்து விட்டன. மீள் வாழ்வு என்பது இன்னும் சவாலாகவே உள்ளது.

வட,கிழக்கில் 89 ஆயிரம் விதவைகள், அங்கவீனர்கள் வாழ்வாதாரம் இன்னும் கேள்விக் கூறியாகவே உள்ளது.கட்டமைக்கப்பட்ட எந்த முனைவுகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.

ஆகவே விடுதலை எனும் உயரிய நோக்கோடு போராடிய இனம் எத்தகைய சவால்களுக்கும் முகம் கொடுத்தே நிமிர வேண்டும் என்பதே வரலாறு நமக்கு கற்றுத் தந்த பாடமாகும்

தற்போதைய ஷகோரோனா’ சூழலை அரசாங்கம் சாதகமாக பயன்படுத்தி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வை பல வழிகளிலும் தடுக்க முனைகின்றது.

தற்போதைய அரசே இனப்படுகொலையின் பிதா மகன் என்பதாலும் பிரகடனமற்ற இராணுவ ஆட்சியை முன்னெடுப்பதாலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை பல வழிகளிலும் தடை செய்யலாம்.

புலனாய்வாளர்களைக் கொண்டு மிரட்டலாம். இவற்றைக் கண்டு அசந்து விடாதீர்கள். சத்தியத்திற்காக சாகத்துணிந்த இனம் அற்ப மிரட்டல்களுக்கு அடி பணிய முடியாது.

‘கொரோனா’ பிரச்சினை தொடர்வதால் பொது அமைப்புகள், தனி நபர்கள் என அனைவரும் சிறிய அளவில் என்றாலும் நினைவு கூரலை முன்னெடுங்கள்.

இன்றைய சிறார்களுக்கு அரசின் இனப்படுகொலை பற்றி தெளிவூட்டுங்கள். இது தான் காலத்தின் கடமையும் தமிழர்களின் கட்டாயமும் ஆகும்.என குறித்த அறிக்கையின் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.