ஜனாதிபதித் தேர்தலில் 41 பேர் போட்டி!

Election 2019
Election 2019

எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் 19 அரசியல் கட்சிகள், 22 சுயேச்சை குழுக்கள் உட்பட 41 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

அதில் இரண்டு தமிழர்களும், நான்கு முஸ்லிம்களும், இரண்டு பெண்களும் அடங்குவது குறிப்பிடத்தக்கது. தமிழ் வேட்பாளர்களாக எம். கே. சிவாஜிலிங்கம், சுப்பிரமணியம் குணரத்னம் ஆகியோரும், முஸ்லிம் வேட்பாளர்களாக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ், முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான டாக்டர் ஐ.எம். இல்யாஸ், ஏ. எச்.எம். அலவி ஆகியோர் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

வரலாற்றில் முதற்தடவையாக இம்முறை கூடுதலான வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

வேட்பு மனுக்கள் இன்று (07) திங்கட்கிழமை காலை 9 மணி முதல் 11 மணி வரை தேர்தல்கள் ஆணைக்குழுச் செயலகத்தில் ஏற்றுக்கொள்ளப்படவிருக்கிறது. ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்வார்.

தேர்தல் செயலக வளாக பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வேட்பாளருடன் அனுமதி பெற்ற இருவருமாக மூவர் மாத்திரமே அனுமதிக்கப்படுவார்களென அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் ஆட்சேபனை முன்வைக்க 11 மணி முதல் 11.30 வரை கால அவகாசம் வழங்கப்பட இருப்பதோடு அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர்களை 12 மணிக்கு ஆணையாளர் அறிவிப்பார்.

தற்போது ஜனாதிபதி தேர்தலுக்காக நான்காயிரம் மில்லியன் ரூபாவே ஒதுக்கப்பட்டுள்ளது. இது 4500 மில்லியன்கள் வரை அதிகரிக்குமென எதிர்பார்த்திருந்தோம். எனினும் கட்டுப்பணம் செலுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதனால் செலவீனம் சுமார் 05 ஆயிரம் மில்லியன் ரூபாய் வரை அதிகரிக்கலாமென்றும் அறிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்காக இந்தோனேசியா, இந்தியா,அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா மற்றும் மாலைதீவு ஆகிய ஐந்து நாடுகளுக்கு உத்தியோகப்பூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுநலவாய கண்காணிப்பு அமைப்புக்கள் தமது சுய விருப்பில் இலங்கை வரவுள்ளன.

ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர் மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் எவரும் போட்டியிடாத ஜனாதிபதி தேர்தலாக இம்முறை இத் தேர்தல் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.