வடக்கு மாகாணத்திற்கு வெளியே போக்குவரத்து ஆரம்பிக்கப்படவில்லை

99
99

வடக்கு மாகாணத்திற்கு வெளியிலான எந்த ஒரு சேவையும் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என யாழ். பேரூந்து நிலைய பொறுப்பதிகாரி எஸ்.தனராஜ் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று தற்போது உள்ள போக்குவரத்து நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்ட கோரொனா தாக்கத்தின் காரணமாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு தற்பொழுது ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து சேவைகள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்று வருகின்றது.

வடக்கு மாகாணத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த போக்குவரத்து சேவை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்று வருகின்றது.

குறுகிய காலத்திற்கு முன்னர் இரண்டு ஆசனத்தில் ஒருவரும் 3 ஆசனத்தில் இரண்டு பேரும் என்ற அடிப்படையில் போக்குவரத்து சேவை இடம்பெற்று வந்தது.

தற்போதைய நிலைமையில் ஆசன மட்டத்தில் பயணிகள் ஏற்றக்கூடிய வாறு சுகாதார நடைமுறைகளை சுகாதாரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றியே இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சேவை நடை பெற்று வருகின்றது.

எனினும் வடக்கு மாகாணத்திற்கு வெளியிலான சேவைகள் எவையும் இலங்கை போக்குவரத்து சபையினால் நடத்தப்படவில்லை, எனினும் எமது சாலைக்கு தொலைபேசி மூலமும் நேரடியாகவும் வருகை தந்து வடமாகாணத்திற்கு வெளியில் பஸ் சேவை இடம்பெறுகிறதா என மக்கள் வினவுகின்றனர்.

எனினும் இலங்கை போக்குவரத்து சபையானது இன்றுவரை வடக்குமாகாணத்திற்கு வெளியில் எந்த ஒரு பஸ் சேவையினையும் ஆரம்பிக்கவில்லை என்பதனை மக்களுக்கு தெளிவாக தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.

அத்தோடு எமது பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் சுகாதார நடைமுறையை பின்பற்றி அதாவது முகக்கவசங்கள் அணிந்து பயணம்செய்வது மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் என எஸ்.தனராஜ் தெரிவித்துள்ளார்.