இந்தியக் கடற்படை கைது செய்த எழுவைதீவு மீனவர்களை விடுவிக்க உதவுமாறு கோரிக்கை!

fish
fish

யாழ்ப்பாணம் எழுவை தீவு மீனவர்களை இந்தியக் கடற்படையினர் கைது செய்துள்ள நிலையில் அவர்களை விடுவிக்க உதவுமாறு அவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் ஊடகமையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்

எழுவைதீவு பருத்தித்துறை மயிலிட்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 18 மீனவர்கள் கடந்த மூன்றாம் திகதி இந்தியக் கடற்படையினர் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்து இந்தியாவிற்கு கொண்டு சென்றுள்ளனர். கடந்த மூன்றாம் திகதி நண்டு பிடிப்பதற்காக தொழிலுக்குச் சென்ற எமது குடும்ப உறுப்பினர்கள் நீண்ட நேரம் ஆகியும் கரைக்குத் திரும்பாத நிலையில் அவர்களுக்கு என்னநடந்தது என்று தவித்துக் கொண்டிருந்தோம்.

அப்போது அவர்களுடன் அருகில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பிற மீனவர்கள் எமது குடும்ப உறுப்பினர்களை கப்பல் ஒன்றில் வந்தவர்கள் கூட்டிச் செல்வதாக எம்மிடம் கூறினர் இதனைக் கேட்ட நாம் என்ன செய்வது என்று தெரியாது திகைத்து நின்றோம். அப்போது எமது குடும்பத்தவர்கள் தங்களை இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளதாகவும் தங்களின் படகுகளை இந்தியாவிற்கு இழுத்துச் செல்வதாக பதற்றத்துடன் கூறினர்.

அதன் பின்னர் இன்று வரை எம்முடன் அவர்கள் தொடர்புகொள்ளவில்லை இந்தியாவில் எங்கு தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் என்று எமக்குத் தெரியாதுள்ளது. எங்கள் குடும்பத்திலுள்ள கணவன் பிள்ளைகள் போன்றவர்களுக்கு என்ன நடந்தது என தெரியாது திக்குமுக்காடி வருகின்றோம். இவ்வாறான நிலையில் கடற்றொழிலுக்குச் சென்ற எமது குடும்பத்தவர்களுக்கு என்ன நடந்தது கண்டு பிடித்து இந்தியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அவர்களையும் படகுகளையும் விடுவிக்க உதவுமாறு யாழ்ப்பாணத்திலுள்ள மாவட்ட நீரியல் வளத்திணைக்களப் பணிப்பாளரிடமும் இந்தியத் துணைத்தூதரிடமும் கோரிக்கை விடுத்துள்ளோம்.

அன்றாடம் கடலில் தொழில் செய்யும் சீவியம் நடத்தி வரும் எமக்கு எங்களின் குடும்ப உறவுகளை விடுவித்து தருமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றனர்.