தற்போது ஆட்சியில் உள்ள ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச, புதிய அரசியல் அமைப்பை நிறைவேற்றுவராக இருந்தால், அவருக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு ஆதரவு வழங்கத் தயார் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்று செவ்வாய் கிழமை வவுனியாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டமைப்பு ஒன்றுமே செய்யவில்லை என்பது அப்பட்டமான பொய் என்று கூறிய அவர், எவுதும் செய்து முடிக்கப்படாமல் ஒரு தொய்வு ஏற்பட்டுள்ளது உண்மைதான் என்றும் கூறினார்.
தற்போதைய ஜனாதிபதியும் புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்று கூறியதாக குறிப்பிட்ட சுமந்திரன், அதில் தமிழர்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்பட்டால், ஆதரவு வழங்கத் தயார் என்றும் குறிப்பிட்டார்.
தாம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கத் தயார் என்பது அரசாங்கத்திற்கான ஆதரவு அல்ல என்றும் புதிய அரசுக்கான ஆதரவே என்றும் அவர் கூறினார்.