கூட்டமைப்பை உருவாக்கியவன் நான் – கருணா

karuna amman 1
karuna amman 1

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியது நானே. போர் நடைபெறுகையில் நாடாளுமன்றில் தமிழர்களின் குரல் ஒலிக்கவேண்டும் என சிவராம் கூறியதற்கிணங்க தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரிடம் கூறி நானே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினேன்.” என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சரும் அம்பாறை மாவட்ட வேட்பாளருமான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

பொத்துவில் – ஊறணியில் தேர்தல் பரப்புரையில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-

“வடக்கு, கிழக்கில் இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு படுதோல்வியைச் சந்திக்கும். கொழும்பை மையமாக வைத்தியங்கும் சுமந்திரன் ரணிலின் முகவர். தமிழர்களை விற்றவர். வடக்கு, கிழக்கை அவருக்குத் தெரியாது. இன்று அவர் போராளிகளைச் கொச்சைப்படுத்துகின்றார். யாழ். மக்கள் அவருக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள்.

அன்று அக்கட்சியில் இருந்தவர்கள் நல்லவர்கள் – வல்லவர்கள். இன்று அத்தனை பேரும் கள்வர்கள். தமிழர்களை விற்று பணம் சம்பாதித்தவர்கள். சுமந்திரன் என்று அதற்குள் புகுந்தாரோ அன்றோடு கூட்டமைப்பு அழிவை எதிர்நோக்கியது.

அம்பாறை மாவட்டத்தில் கூட்டமைப்பு முகவர் ஒருவர் இருக்கின்றார். அவருக்குள்ள வர்த்தகம் பூராக முஸ்லிம்களுடன். கஞ்சிகுடிச்சாற்றில் வெட்டும் எமது மரங்களை அவர்களுக்கு விற்பது, மலையை உடைத்து அவர்களுக்கு விற்று கமிசன் உழைக்கின்றார். ஒப்பந்தமே அவரது வேலை. மக்களுக்குச் செய்தது ஒன்றுமில்லை.

முதன் முதலில் கப்பலோட்டியவன் தமிழன். எமது சின்னம் கப்பல். அன்று வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்கா வரை கப்பலோட்டியவன் தமிழன். நாம் இன்று அம்பாறையில் கப்பலோட்டுவோம். இளைஞர்கள் ஒன்றுதிரண்டுள்ளனர். மகிழ்ச்சி.

அன்று என்னை மட்டக்களப்புக்கும் அம்பாறைக்கு பியசேனவையும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச நியமித்தார். நான் மட்டக்களப்பில் பல கோடி ருபா பெறுமதியான வேலைகளைச் செய்தேன். பாசிக்குடா அபிவிருத்தி, கல்லடிப்பாலம், பிரண்டிக்ஸ் நிறுவனம் இப்படிப் பல .இன்று பிரண்டிக்ஸில் 7 ஆயிரம் தமிழ் யுவதிகள் வேலை செய்கின்றார்கள். அதேபோல் அம்பாறையில் செய்வேன். மாற்றத்துக்காக ஒன்றுபடுங்கள்” – என்றார்.