கிளாலி இளைஞன் மீதான துப்பாக்கிப் பிரயோகம் மனிதக் கொலை – சிறிகாந்தா கண்டனம்

srikantha
srikantha

நேற்று சனிக்கிழமை மாலை கிளாலியில் ராணுவசிப்பாய் ஒருவரால் செய்யப்பட்ட துப்பாக்கிபிரயோகத்திற்கு இரையான இளைஞரின் மரணம் மனிதக் கொலை என்பதில் சத்தேகத்திற்கு இடமில்லை என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக சிறிகாந்தா அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,


சட்டவிரோதமாக மண் ஏற்றிச் செல்லமுயன்ற சம்பவத்துடன் தொடர்புபட்டிருத்தார் என்ற சந்தேகத்தில் எவர் மீதும் துப்பாக்கி பிரயோகம் செய்வதற்கு எவருக்கும் அதிகாரம் கிடையாது.
மோட்டார் சைக்கிளை செலுத்திவந்த குறித்த இளைஞர் ராணுவ சிப்பாய்களால் வழிமறிக்கப்பட்டபோது தப்பிச் செல்ல முயற்சிக்கையில் துப்பாக்கிபிரயோகம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அந்த இளைஞரை துரத்திச் சென்று கைது செய்ய முயற்சி எதுவும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. சம்பந்தப்பட்ட ராணுவச் சிப்பாய்க்கு அவரால் ஆபத்து ஏதும் ஏற்படக் கூடிய சூழ்நிலையும் இருந்திருக்கவில்லை. இந்நிலையில் துப்பாக்கிபிரயோகம் தேவையற்றது. கண்மூடித்தனமாக அது நடாத்தப்பட்டிருக்கின்றது.

இதே வேளையில் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றபோது சுடப்பட்டவரின் உடல் அங்கே கைப்பற்றப்பட்டிருத்த உழவு இயந்திரத்துக்கு எப்படி வந்தது என்ற கேள்வியும் எழுந்திருக்கின்றது. சம்பவத்தை திசைதிருப்பி, உண்மையை மறைப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டிருக்கின்றது என்பது தெரிகின்றது.


இச்சம்பவம் தொடர்பில் பாரபட்சம் அற்றதும், முழுமையானதுமான புலன் விசாரணையை பொலீஸ் தரப்பு முன்னெடுத்து, சகல சாட்சியத்தையும் ஆதாரங்களையும் நீதிமன்றில் சமர்ப்பிக்கவேண்டும் என்று நாம் கோருகின்றோம்.
வடமாகாணபிரதிப் பொலீஸ் மாஅதிபர் உரியநடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்தவேண்டும் என்றும் நாம் வேண்டிக்கொள்கின்றோம்.


படைவீரர்களின் கைகளில் உள்ள துப்பாக்கிகள் எந்தச் சூழ்நிலையிலும் துஸ்பிரயோகம் செய்யப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் விதத்தில், திட்டவட்டமான கட்டளைகளை பாதுகாப்பு அமைச்சு படைத்தரப்புகளுக்கு வழங்க முன்வரவேண்டும் என்றும் நாம் இச் சந்தர்ப்பத்தில்கோருகின்றோம்.