மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் பிறப்பில் அவயவங்களை இழந்தவர்களுக்கு இலவசமாக அவயவங்களை வழங்கும் விஷேட திட்டம் தற்போது ஜேர்மன் நாட்டு உதவியினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் வேண்டுகோளில் கிழக்கு மாகாண சமூக சேவைத் திணைக்களத்தின் சிபாரிசில் யுத்தம், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் பிறப்பில் அவயவங்களை இழந்தவர்களுக்கு இலவசமாக செயற்கை அவயங்கள் வழங்கும் நிகழ்வு செயலக சமூக சேவை அலுவலகத்தில் (இன்று) புதன்கிழமை இடம்பெற்றது.
கோறளைப்பற்று மத்தி சமூக சேவை உத்தியோகத்தர் அசனார் நஜீம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில், உதவி பிரதேச செயலாளர் செயலாளர் எம்.ஏ.சீ.றமீஸா. நவஜீவன கிழக்கு மாகாண இணைப்பாளர் எஸ்.ரவிச்சந்திரன், சமூக சேவை பிரிவின் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவலிலுள்ள மாற்றுத் திறனாளிகளில் 18 பேருக்கு செயற்கை அவயவங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இதில் முழங்கை, கால் கீழ்ப்பகுதி மற்றும் மேல் பகுதிகளை இழந்தவர்களுக்கும் மற்றும் போலியோ நோயினால் பாதிக்கப்பட்ட சிறு பிள்ளைகளுக்கான பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டது. இந்த அவயவங்களை குண்டசாலை ஹெண்டிகெப் நிலையம் தயாரித்து வழங்கியுள்ளது. ஜேர்மன் நாட்டின் கிறிஸ்ரப்ஸ் பிளைன் மிசன் (சீ.பீ.எம்.) நிறுவனம் நிதி உதவி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.