75 கள்ளவாக்குகள் போட்ட சிறிதரனுக்கு எதிராக முறைப்பாடு! 12 மாதம் சிறைத் தண்டனைக்கு வாய்ப்பு?

sri
sri

தாம் கள்ள வாக்கு போட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ் தேர்தல் தொகுதி வேட்பாளருமான சிவஞானம் சிறிதரன் கூறியுள்ள நிலையில், அவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல்கள் தொடர்பான முறைப்பாட்டு பிரிவில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளரால் இந்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்காவில் கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தாம் 75 கள்ள வாக்குகளைப் போட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்திருந்தார்.

ஸ்ரீதரனின் இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேர்தல் கட்டமைப்பையே கேள்விக்குறியாக்கும் வகையில் ஸ்ரீதரனின் கருத்து அமைந்துள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ஸ்ரீதரன் வெளியிட்ட கருத்துக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளரும் சட்டத்தரணியுமான செலஸ்ரின் ஸ்ரான்ஸ்ஸாஸ்சினால் தேர்தல்கள் தொடர்பான முறைப்பாட்டுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாடு செய்யப்பட்டமைக்கான அத்தாட்சியுடன் யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு சென்ற அவர் தாம் செய்த முறைப்பாடு தொடர்பில் பொலிஸாருக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.

தாம் அளித்துள்ள கள்ள வாக்குகள் தொடர்பில் சிறீதரன் வழங்கியுள்ள வாக்குமூலத்தினால் அவருக்கு 12 மாதம் சிறை தண்டனை வழங்கும் வாய்ப்பு சட்டத்தில் காணப்படுவதாகவும் முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.