கூட்டமைப்பு வேறு திசையில் செல்லாமல் இருப்பதற்கு போராளிகள் ஜனநாயக நீரோட்டத்திற்கு வர வேண்டும்

DSC 0084
DSC 0084

தேசத்துக்காகவும்,  மக்களுக்காகவும் , மண்ணுக்காகவும் விடுதலைப் போராட்டத்தில் அர்ப்பணித்த போராளிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஒரு அங்கமாக ஜனநாயக நீரோட்டத்தில் கலந்து கொள்ளுகின்ற ஒரு முறைமையை மேற்கொள்ளுவதற்காக தமிழீழ விடுதலை இயக்கம் முதற்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக டெலோ கட்சியின் தலைவரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

-அவர் மேலும் தெரிவிக்கையில்,,, 
எங்களுடைய தேசத்துக்காக, எங்களுடைய மக்களுக்காக , மண்ணுக்காக விடுதலைப் போராட்டத்தில் அர்ப்பணித்த போராளிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஒரு அங்கமாக ஜனநாயக நீரோட்டத்தில் கலந்து கொள்ளுகின்ற ஒரு முறைமையை மேற்கொள்ளுவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பை நெறிப்படுத்தி எங்களுடைய இனத்தின் சார்பாக உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு   வேறு திசையில் செல்லாமல் இருப்பதற்கும்   ஆயுதம் ஏந்திய போராளிகள் ஜனநாயக நீரோட்டத்திற்கு வர வேண்டும் என்பது தான் பிரதான நோக்கமாக இருக்கிறது.

அந்த வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பை இந்தப்  போராளிக் கட்சிகள் பலம் சேர்க்க வேண்டும்.அதன் ஒரு அங்கமாகவும் பங்கு தாரர்களாகவும் வர வேண்டும் என்பது எங்களுடைய நோக்கம்.
அந்த வகையில் விடுதலைப் புலிகளின் போராளிகள் 3 அல்லது 4 அமைப்புகளாக இருக்கிறார்கள்.
-தேசியத்தோடு இன உணர்வோடு இருக்கின்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்புக்களை தனித்துவத்தோடு தமிழ் தேசிய கூட்டமைப்பில் போராட்ட இயக்கங்கள் என்கின்ற அடிப்படையில் நாங்கள் ஒற்றுமையான  ஒரு நிர்வாக கட்டமைப்பு கொண்ட அமைப்பாக செயல்பட வேண்டும் என்ற   அடிப்படையில் நாங்கள் அந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறோம்.
 

அடுத்த வாரம் நாங்கள் எல்லாரும் சேர்ந்து   தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்குதாரர்களாக விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்ட இயக்கங்களை நாங்கள் இணைக்கின்ற ஒரு முயற்சியை மேற்கொள்ளுகின்றோம்.அந்த வகையில் தேசியத்தோடு நிற்கின்றவர்களையும் சேர்த்து ஏற்கனவே கூட்டமைப்பில் தமிழீழ விடுதலை இயக்கம் மற்றும் புளொட்  அமைப்பு ஆகிய இந்த இரண்டு இயக்கங்களும் ஏற்கனவே இருக்கின்ற காரணத்தால் ஏனையவர்களை    நாங்கள்  ஒன்று சேர்த்து   ஒரு அமைப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பில் செயற்படுவதாக நாங்கள் முடிவெடுத்திருக்கின்றோம்.
 

அந்த வகையிலே அவர்களை இணைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பில் இனிவரும் காலங்களில் அரசியல் நீரோட்டத்தில் அவர்கள் இணைத்து எங்களுடைய மக்களுடன் பயணிக்க உள்ளோம்.
 எங்களுடைய போராளிகள் எல்லாரும் ஒரு போனஸ் வாழ்க்கையை   வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய சிந்தனை , எங்கள் மண்ணை மீட்டும் எடுப்பதற்கான சிந்தனையோடு அவர்கள் இந்த போராட்டத்தில் தங்களை அர்ப்பணித்தவர்கள்.

அவர்களுடைய சிந்தனை அரசியல் ரீதியாகவும் வெளிப்பட வேண்டும். அவர்களுடைய சிந்தனை எங்களுடைய மக்களுடைய அபிலாசைகளை எங்களுடைய மக்களுடைய அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கான வழிமுறைகளை அவர்கள் எல்லோரும்,   விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்ட எல்லோரும் இவ்விடயத்தில் ஐக்கியமாக இருந்து  தமிழ் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்தி நெறிப்படுத்த வேண்டும்.
 

விடுதலைக்காக போராடிய, ஆயுதமேந்திய தேசியத்தோடு, இன விடுதலைக்காக நிற்கின்ற எல்லாரும் எங்களுடைய மண்ணுக்காக குரல் கொடுக்க, மண்ணுக்காக உயிரை தியாகம் செய்ய முன் வந்தவர்கள்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பங்குதாரராக இருப்பதற்கு அவர்களுக்கு உறுத்து இருக்கின்றது.அதற்கான வழியை ஏற்படுத்துவதற்கு தமிழீழ விடுதலை இயக்கம் முயற்சி செய்து கொண்டிருக்கிறது.

ஆகவே இந்த விடயத்தில் எங்களுடைய விடுதலை இயக்கங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பங்குதாரர்களாக வந்து எந்த நோக்கத்துக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதோ அதை நல்ல முறையில் கொண்டு செல்வதற்கான ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்குவதே   எங்களுடைய முயற்சியாக இருக்கின்றது.
வெகு விரைவிலே நாங்கள் இது சம்பந்தமாக எல்லோரையும் ஒருங்கிணைத்து விடுதலைப்போராட்டத்தில் பங்கு கொள்கின்ற அனைத்துப் போராளிகளையும் தேசியத்தோடு பயணிக்கின்ற அனைத்துப் போராளிகளையும் நாங்கள் உள்ளடக்கி   ஒரு அமைப்பாக உருவாக்கி எங்களுடைய செயற்பாடுகள் இருக்கும்.
 

ஏனென்றால் இதனை உருவாக்கம் செய்யப்பட்ட விதம் ஒரு போராட்ட சிந்தனையோடு ஒரு விடுதலையின் சிந்தனையோடு அரசியல் ரீதியாக அதைத் தொடர்ந்து ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டாலும்    கூட அரசியல் ரீதியாக அது தொடர வேண்டும் என்ற சிந்தனையோடு உருவாக்கப்பட   தமிழ் தேசியக்கூட்டமைப்பில் இந்தப் போராட்ட இயக்கங்கள் அணி திரண்டு ஒன்றிணைந்து இதை சரியான முறையில் கொண்டு செல்லுகின்ற பொறுப்பும் கடமையும் இருக்கிறது.
தமிழீழ விடுதலை இயக்கம் இதற்கு ஒரு அத்திவாரமாக வித்திடுகின்றது.

நாங்கள் எல்லாரும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே நாங்கள் ஒழுங்காக செயற்படுகின்ற வாய்ப்பை உருவாக்குகிறோம். தேர்தலுக்கான நோக்கமாக ஒரு போதும் அமையாது.
அவ்வாறு இதனை யாரும் பார்க்க வேண்டாம்.தமிழ் தேசியக்கூட்டமைப்பை நெறிப்படுத்துகின்ற செயலாக பாருங்கள்.என அவர் மேலும் தெரிவித்தார்.