யாழ்ப்பாணத்தில் குடும்பத் தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் கோடரியால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தில் மணியம்தோட்டம் 2 ஆம் குறுக்குத்தெருவைச் சேர்ந்த கலஸ்ரன் (வயது 33) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்
மணியந்தோட்டம் 3ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த உறவினரே (மச்சான்) கொலை செய்தார் என்று விசாரணைகளில் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
“கொழும்புத்துறை பகுதியில் உள்ள நபர் ஒருவருக்கும், உயிரிழந்தவருக்கும் இடையில் நீண்டகாலமாக மோதல் நிலை இருந்தது. இன்றும் வாய்த்தர்க்கம் முற்றி கைகலப்பாக மாறியது.
அந்த நபர் கோடரியால் இளைஞரின் தலையில் அடித்துள்ளார். தலையில் பலமாக அடிபட்டதால், சம்பவ இடத்திலேயே இளைஞர் உயிரிழந்துள்ளார்” என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வைக்கப்பட்டுள்ளது. கொலைச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.