சர்வ மதங்களின் ஊடாக மக்களை வழி நடத்தும் அதேவேளை அரசியல் தலைவர்களையும் அவ்வழியில் செயலாற்றுவதற்கு நாங்கள் முயற்சிகள் எடுக்க வேண்டும் என யாழ்.ஆயர் அருட்கலாநிதி ஜஸ்ரின் பேர்னாட் ஞானப்பிரகாசம் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்ட எகேட் கரித்தாஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்ட சர்வ மதத்தலைவர்கள் யாழ்.ஆயரை நேற்று ஆயர் இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
சர்வ மதங்கள் ஊடாகத்தான் இந்த நாட்டிற்கு சமாதானத்தைக் கொண்டுவர முடியும். எல்லா மதங்களும் போதிப்பது அன்பு, சமாதானம், இரக்கம். எல்லா மதங்களும் இதைத்தான் சொல்கின்றன. இதன் ஊடாகத்தான் மக்களையும் வழிநடத்தவேண்டும். அரசியல்வாதிகளை நம்பினால் நாங்கள் எதனையும் செய்ய முடியாது.
அரசியல்வாதிகள் அரசியல் நலன்களுக்காகத்தான் செயற்படுகின்றார்கள். இவர்களைத் திருத்த முடியாது. எங்களால் மக்கள் மத்தியில் அன்பு, இரக்கம் போன்றவற்றை செய்ய முடியும். மதங்களில் சில அடிப்படை வாதிகள் இருக்கிறார்கள். ஏப்ரல் மாதம் இடம்பெற்ற சம்பவமும் இதுதான். இந்த அடிப்படைவாதம் எல்லா மதங்களுக்குள்ளும் இருக்கின்றது. நாங்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.
இந்த அடிப்படைவாதத்தை தூண்டி பகையை வளர்ப்பதற்கு வேறு சிலர் பின்னணியில் இருக்கின்றார்கள். இதற்காக நாங்கள் சென்று ஒரு சமுதாயத்தை பகைக்க முடியாது. நாங்கள் காரணத்தை அறிந்து செயற்படவேண்டும். சர்வ மதத்தினர் ஒன்றிணைந்துள்ளது போல் மக்களையும் ஒன்றிணைத்து இந்த நாட்டைக் காப்பாற்ற வேண்டும். நான், எனது, எமது மதம் என்ற போக்கு இன்று காணப்படுகின்றது. இதில் மாற்றமடைய வேண்டும். ஆசைகள் இருப்பதால் தான் இத்தகைய பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
கத்தோலிக்க சமயம் அயலவனை நேசி என்று கூறுகின்றது. அதற்காக கத்தோலிக்கரை நேசி என்று கூறவில்லை. அனைவரையுமே நேசி என்றே கூறுகின்றது. இவ்வாறே அனைத்து மதங்களும் போதிக்கின்றன. சர்வமதக் குழுவினர் எவ்வாறு மக்கள் மத்தியில் சென்று செயற்படுகின்றார்களோ அவ்வாறே அரசியல்வாதிகளும் மக்கள்மத்தியில் சென்று செயற்பட வேண்டும். தொடர்ந்தும் மக்கள் மத்தியில் செயற் பட வேண்டும் மக்களை நல்வழிப்படுத்தவேண்டும் என்றார்.
இந்தச் சந்திப்பில் திருகோணமலை மாவட்ட எகேட் கரித்தாஸ் நிறுவனத்தின் இயக்குநர் அருட்பணி டன்ஸ்ரன், பௌத்த தேரர் சீனாய பேமரத்ன மற்றும் இந்துக் குருக்கள், முஸ்லிம் மத குருமார்கள், யாழ்ப்பாணம் கியூடெக் கரித்தாஸ் நிறுவனத்தின் செயற்பாட்டர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.