நுவரெலியா மாவட்ட தேர்தல் கடமைகளுக்காக தெரிவு செய்யப்பட்டிருந்த வாக்களிப்பு மத்திய நிலைய சிரேஷ்ட அதிகாரிகள் 10பேர் அந்த கடமைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி ரோஹண புஷ்பகுமார தெரிவித்தார்.
குறித்த அதிகாரிகள் அரசியல் கட்சி ஒன்றில் தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்துகொண்டிருந்தமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமையவே நீக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நுவரெலியா மாவட்ட தேர்தல் கடமைகளுக்காக தெரிவு செய்யப்பட்டிருந்த வாக்களிப்பு மத்திய நிலைய சிரேஷ்ட அதிகாரிகள் 10பேர் அந்த கடமைகளில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. அவர்களுக்கு பதிலாக வேறு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த 10 அதிகாரிகளும் குறிப்பிட்ட அரசியல் கட்சி ஒன்றின் தேர்தல் கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவித்து புகைப்படங்களுடன் ஆதார பூர்வமான தகவல்கள் பல கிடைத்ததற்கமைய அவர்களை தேர்தல் கடமைகளில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்தோம்.
தேர்தல் கடமைகளில் இருந்து இவ்வாறு நீக்கப்பட்டவர்கள். வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்காக நியமிக்கப்பட்டிருந்த சிரேஷ்ட உறுப்பினர்களாவர். இவர்கள் 10பேரும் அந்த பிரதேசங்களைச் சேர்ந்த ஆசிரியர்களாகும். அத்துடன் இன்று இடம்பெற இருக்கும் பொதுத் தேர்தலுக்காக நுவரேலியா மாவட்டத்தில் 498 வாக்களிப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் அதற்காக 4ஆயிரத்து 100அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சுகாதார பாதுகாப்பு மற்றும் வாக்கு எண்ணும் நடவடிக்கைக்காக இரண்டாயிரம் பேர்வரை நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.