“ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றி உறுதி. மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை எதிர்பார்த்துள்ளோம். இலக்கு வெற்றிப்பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. வீழ்ச்சியடைந்துள்ள தேசிய பொருளாதாரத்தை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தில் சீர் செய்து சவால்களை வெற்றிக் கொள்ள முடியும்” என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மெதமுல்ல டி. ஏ ராஜபக்ஷ வித்தியாலயத்தில் இன்று வாக்களித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு கட்சி ஆட்சியமைத்து குறுகிய காலத்தில் தேசிய தேர்தல்களை வெற்றிக் கொண்டுள்ளது. பொதுஜன பெரமன பொதுத்தேர்தலிலும் வரலாற்று ரீதியில் தடம் பதிக்கும். மக்களின் அபிலாசைகளுக்கு மதிப்பு கொடுத்துள்ளமையினால் பொதுஜன பெரமுன தொடர்ந்து மக்களாணையை பெற்றுக் கொண்டுள்ளது.
பொதுத்தேர்தலில் வாக்களிப்பதில் மக்கள் அதிக அக்கறை கொண்டுள்ளார்கள். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றிப்பெறும் என்பதை உறுதியாக குறிப்பிட வேண்டும். மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை எதிர்பார்த்துள்ளோம். எதிர்பார்ப்பு வெற்றிப் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
கொவிம் – 19 வைரஸ் தாக்கத்தினால் வீழ்ச்சியடைந்துள்ள தேசிய பொருளாதாரத்தை ஜனாதிபதி கோத்தபய மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தில் சீர் செய்ய முடியும். அனைத்து சவால்களையும் வெற்றிக் கொள்ள தயாராக உள்ளோம்.
சர்வதேச சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பொதுத்தேர்தலை சிறந்த முறையில் நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்த நடவடிக்கைகள் மற்றும் அதனை செயற்படுத்த உதவி புரிந்த சுகாதார தரப்பினர், பாதுகாப்பு தரப்பினர் ஆகியோருக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளோம்” என தெரிவித்துள்ளர்.